இலவச வாக்குறுதிகள் அறிவிக்கும் அரசியல் கட்சிகள் – தேர்தல் கமிஷன் விளக்கம்

இலவச வாக்குறுதிகள் அறிவிக்கும் அரசியல் கட்சிகள் – தேர்தல் கமிஷன் விளக்கம்

தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் எடுக்கும் முடிவுகள், கொள்கைகளில் தேர்தல் ஆணையத்தால் தலையிட முடியாது.தேர்தலுக்கு முன்போ, தேர்தலுக்குப் பிறகோ அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகள், செயல்படுத்துவதற்கு சாத்தியமானதா, மாநிலத்தின் நிதி நிலைமையை பாதிக்குமா என்பது குறித்து வாக்காளர்கள் தான் ஆராய்ந்து, தீர்மானித்து முடிவு எடுக்க வேண்டும் என்று தேர்தல்‌ ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில்‌ தெரிவித்துள்ளது.

பாஜக மூத்த தலைவரும்‌, சுப்ரீம் கோர்ட் வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய சார்பில்‌ தாக்கல்‌ செய்த மனு. ஒன்றில்‌, ‘தேர்தல்‌ சமயங்களில்‌ இலவச வாக்குறுதிகளை அறிவிக்கும்‌ அரசியல்‌ கட்சிகளின்‌ பதிவை ரத்து செய்யவும்‌, சின்னத்தை முடக்கவும்‌ தேர்தல்‌ ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்‌’ என்று குறிப்பிட்டிருந்தார்‌. இந்த மனு மீது பதிலளிக்க தேர்தல்‌ ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

அதனடிப்படையில்‌ தேர்தல்‌ ஆணையம்‌ சார்பில்‌ (ஏப்-09) நேற்று தாக்கல்‌ செய்யப்பட்ட பதில்‌ மனுவில்‌ கூறியிருப்பதாவது: தேர்தலில்‌ வெற்றி பெற்ற கட்சி ஆட்சியமைக்கும்போது எடுக்கும்‌ முடிவுகள்‌ மற்றும்‌ மாநிலக்‌ கொள்கைகளை தேர்தல்‌ ஆணையம்‌ ஒழுங்குபடுத்த முடியாது. சட்டத்தில்‌ அதற்கு இடமில்லாத நிலையில்‌ அதனை ஒழுங்குபடுத்தும்‌ நடவடிக்கையை தேர்தல்‌ ஆணையம்‌ மேற்கொள்வது அதிகார மீறலாகவே அமையும்‌.

மேலும்‌, தேர்தலுக்கு முன்பும்‌ அதற்கு பின்னரும்‌ இலவசங்களை அறிவிப்பது என்பது அந்தந்த அரசியல்‌ கட்சிகளின்‌ கொள்கை முடிவாகும்‌. இந்த அறிவிப்புகள்‌ நடைமுறையில்‌ சாத்தியமா, மாநிலப்‌ பொருளாதாரத்தில்‌ கடும்‌ பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை அந்தந்த மாநில வாக்காளர்கள்தான்‌ தீர்மானிக்க வேண்டும்‌.

47 பரிந்துரைகள்‌: தேர்தல்‌ சீர்திருத்தங்கள்‌ தொடர்பாக தேர்தல்‌ ஆணையம்‌ சார்பில்‌ கடந்த 2016-ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதம்‌ 47 பரிந்துரைகள்‌ மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. அந்தப்‌ பரிந்துரைகளில்‌, விதிமீறலில்‌ ஈடுபடும்‌ அரசியல்‌ கட்சிகளின்‌ பதிவை ரத்து செய்வது தொடர்பான பரிந்துரையும்‌ இடம்பெற்றுள்ளது.

அதோடு, அரசியல்‌ கட்சிகளின்‌ பதிவை ரத்து செய்வதற்கும்‌, பதிவை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக அரசியல்‌ கட்சிகளுக்குத்‌ தேவையான உத்தரவுகளைப்‌ பிறப்பிக்கும்‌ வகையிலும்‌ தேர்தல்‌ ஆணையத்துக்கு அதிகாரமளிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல்‌ ஆணையம்‌ சார்பில்‌ பரிந்துரைகள்‌ சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

‘இலவச வாக்குறுதிகளை அறிவிக்கும்‌ அரசியல்‌ கட்சிகளின்‌ பதிவை ரத்து செய்யவும்‌, கட்சியின்‌ சின்னத்தை முடக்கவும்‌ தேர்தல்‌ ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்‌’ என்று மனுதாரர்‌ கோரியிருப்பதைப்‌ பொருத்தவரை, 3 காரணிகள்‌ அடிப்படையில்‌ மட்டுமே இந்த நடவடிக்கையை தேர்தல்‌ ஆணையம்‌ எடுக்க முடியும்‌ என்று சுப்ரீம் கோர்ட் ‌ கடந்த 2002-ஆம்‌ ஆண்டு தீர்ப்பில்‌ தெரிவித்து இருக்கிறது. அந்தத்‌ தீர்ப்பின்படி, மோசடி வழியில்‌ அரசியல்‌ கட்சிப்‌ பதிவை செய்திருந்தால்‌ அல்லது பதிவு செய்யப்பட்ட அரசியல்‌ கட்சி அதன்‌ அமைப்பின்‌ பெயர்‌, விதிகள்‌ மற்றும்‌ நடைமுறைகளில்‌ திருத்தங்களை மேற்கொண்டிருந்தால்‌ அல்லது அரசியலமைப்பின்‌ மீதான நம்பிக்கை மற்றும்‌ பற்றை இழந்துவிட்டதாக தேர்தல்‌ ஆணையத்திடம்‌ ஒரு கட்சி அறிவித்தால்‌ மட்டுமே ஓர்‌ அரசியல்‌ கட்சியின்‌ பதிவை ரத்து செய்யும்‌ நடவடிக்கையை தேர்தல்‌ ஆணையம்‌ எடுக்க முடியும்‌. ஆனால்‌, மனுதாரர்‌ குறிப்பிட்டிருக்கும்‌ காரணம்‌ இந்த 3 காரணிகளின்‌ கீழ்‌ வரவில்லை.

மேலும்‌, “தேர்தலுக்கு முன்பாக பொது நிதியிலிருந்து இலவசங்களை வாக்குறுதிகளாக அறிவிக்கக்‌ கூடாது என்பதை கூடுதல்‌ நிபந்தனையாக அரசியல்‌ கட்சிகளுக்கு நிர்ணயிக்குமாறு தேர்தல்‌ ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்‌’ என்று மனுதாரர்‌ கோரியிருக்கிறார்‌. 1968-ஆம்‌ ஆண்டு தேர்தல்‌ சின்னங்கள்‌ ஒதுக்கீடு உத்தரவின்படி, தேசிய மற்றும்‌ மாநிலக்‌ கட்சிகளை அங்கீகரித்து சின்னங்களை தேர்தல்‌ ஆணையம்‌ ஒதுக்க வேண்டும்‌. அரசியல்‌ கட்சிகளுக்கான இந்த அங்கீகாரம்‌ அளிப்பது அல்லது அங்கீகார நீட்டிப்பு வழங்குவது என்பதை தேர்தலில்‌ அரசியல்‌ கட்சிகளின்‌ செயல்திறன்‌ அடிப்படையில்‌ மட்டுமே தேர்தல்‌ ஆணையம்‌ மேற்கொள்ள வேண்டும்‌ என்று விதிமுறைகள்‌ கூறுகின்றன. இதில்‌ மனுதாரர்‌ கூறுவதுபோல கூடுதல்‌ நிபந்தனைகளைச்‌ சேர்ப்பது, தேர்தலில்‌ அரசியல்‌ கட்சிகள்‌ போட்டியிடுவதற்கு முன்னரே அங்கீகாரத்தை இழக்கும்‌ சூழலை உருவாக்கிவிடும்‌.

அதுபோல, தேர்தல்‌ செயல்திறன்‌ அடிப்படையில்‌ அரசியல்‌ கட்சிகளின்‌ அங்கீகாரத்தை ரத்து செய்வது அல்லது சின்னத்தை முடக்கும்‌ தேர்தல்‌ ஆணையத்துக்கான இந்த அதிகாரத்தை தேர்தலுக்கு முன்பே பயன்படுத்தினால்‌, தேர்தல்‌ நடத்துவதன்‌ முக்கிய நோக்கமே பாதிக்கப்பட்டுவிடும்‌. அதே நேரம்‌, பொய்யான வாக்குறுதிகளால்‌ வாக்காளர்கள்‌ ஈர்க்கப்படுவதைக்‌ கட்டுப்படுத்தும்‌ வகையில்‌, தேர்தல்‌ சமயங்களில்‌ அங்கீகரிக்கப்பட்ட அரசியல்‌ கட்சிகளுடன்‌ ஆலோசனை நடத்தி தேர்தல்‌ நடத்தை விதிமுறைகளை தேர்தல்‌ ஆணையம்‌ நடைமுறைக்கு கொண்டு வருகிறது. மேலும்‌, அரசியல்‌ கட்சிகளின்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ இடம்பெறும்‌ வாக்குறுதிகளை தேர்தல்‌ சட்டத்தின்‌ கீழ்‌ கட்டுப்படுத்த முடியாது என்றபோதும்‌, அந்த வாக்குறுதிகள்‌ தேர்தல்‌ நடத்தை விதிகளுக்கு உள்பட்டதே என்ற உறுதிமொழியை கட்சிகளின்‌ தேர்தல்‌ அறிக்கை நகலுடன்‌ தங்களிடம்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌ என்று தேர்தல்‌ ஆணையம்‌ சார்பில்‌ அறிவுறுத்தல்‌ வழங்கப்பட்டுள்ளது என்று பதில்‌ மனுவில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!