அய்யய்யோ.. இந்த பீட்டா அமைப்பு விலங்குகளை கருணைக் கொலை செய்யும் கும்பல்!-

அய்யய்யோ.. இந்த பீட்டா அமைப்பு விலங்குகளை கருணைக் கொலை செய்யும் கும்பல்!-

தமிழக மக்களின் உணர்வோடும், உயிரோடும் கலந்துள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது ‘பீட்டா’ அமைப்பு .‘பீப்பிள் பார் தி எத்திக்கல் ட்ரீட்மெண்ட் ஆப் அனிமல்’ என்ற ஆங்கில எழுத்தின் சுருக்கம் தான் ‘பீட்டா’.விலங்குகள் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட இந்த அமைப்பு ஆரம்பத்தில் சிறு, சிறு சமூக பணிகளை செய்து வந்த நிலையில் இப்போது ஒவ்வொரு நாடுகளிலும் பிரச்சனையை ஏற்படுத்தும் அமைப்பாக மாறி இருக்கிறது. பீட்டா அமைப்பின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள விர்ஜினியாவில் உள்ளது. இங்கு மனிதனால் கைவிடப்பட்ட அல்லது வெளியே தப்பி வந்த பிராணிகளை பிடித்து வந்து வளர்க்கிறார்கள்.

peta jan 20

இவற்றை சில மாதங்கள் மட்டுமே தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர். தொடர்ந்து பாதுகாக்க முடியாது என்பதால் அவற்றை பீட்டா அமைப்பினரே கொன்றுவிடுகின்றனர்.இவ்வாறு கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 34 ஆயிரத்து 970 நாய், பூனை, முயல் போன்ற வளர்ப்பு பிராணிகளை கொன்றிருக்கிறார்கள். விலங்குகளை பாதுகாக்கிறேன் என்று போராடும் இந்த அமைப்பு இவ்வளவு பிராணிகளை கொன்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.2013-ம் ஆண்டு இந்த நிறுவனத்திடம் 2175 வளர்ப்பு பிராணிகள் கொண்டுவரப்பட்டன. அதில் 1795 பிராணிகளை கொன்றுவிட்டனர்.2014-ம் ஆண்டு 2631 விலங்குகள் கொண்டுவரப்பட்டு அதில் 2324 விலங்குகளை கொன்றுவிட்டனர்.

2015-ம் ஆண்டு 1974 விலங்குகள் கொண்டுவரப்பட்டு அதில் 1456 விலங்குகளை கொன்றிருக்கிறார்கள்.இப்படி விலங்குகளை கொல்பவர்கள் விலங்குகள் பாதுகாப்பு பற்றி பேசலாமா என்று பல்வேறு அமைப்புகளும் கேட்கின்றன. இணையதளங்களில் பீட்டா அமைப்பை பற்றி கடுமையான விமர்சனங்களும் வருகின்றன. இதன் கொடூர நடவடிக்கைக் குறித்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது Peta Kills Animals(PKA) என்ற அமைப்பு. இந்த பீட்டா எப்படி ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பாக உலகம் முழுவதும் இயங்கி வருகிறதோ, அதே அளவு பலத்துடன் Peta Kills Animals(PKA) அமைப்பும் பீட்டாவின் குரூரப் போக்கை எதிர்த்து முழு வீச்சில் இயங்கி வருகிறது.

அதாவது அமெரிக்காவின் விர்ஜீனியாவில் பீட்டாவின் தலைமையகம் உள்ளது. இங்கு ஆதரவற்ற விலங்குகளுக்கான காப்பகத்தை இயக்கி வருவதாக பதிவு செய்திருக்கிறது பீட்டா. இங்கு தான், கடந்த 1978-ம் ஆண்டு முதல் 2015 வரை 27 ஆண்டுகளில் மட்டும் 34,970 நாய் மற்றும் பூனைகளை கொன்று குவித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடுகிறது (PKA).விர்ஜீனியாவின் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம், மேற்கூறிய ஆண்டுகளில், பீட்டா எத்தனை விலங்குகளை எடுத்துக் கொண்டுள்ளது, அதில் எத்தனை விலங்குகளை வேறு காப்பகங்களுக்கு மாற்றியுள்ளது, தத்துக் கொடுக்கப்பட்டுள்ளது, எத்தனை கருணை கொலை செய்யப்பட்டது போன்ற தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதில் கிடைத்த தகவல்கள்தான் மேலே சொன்னவை.

அதாவது அந்நாட்டு சட்டப்படி, ஆதரவற்றதாக கருதப்படும் விலங்குகளை 15 நாட்களுக்கும் மேலாக யாரும் சொந்தம் கொள்ளவோ, தத்தெடுக்கவோ வராவிட்டால் கருணை கொலை செய்யலாம் என்கிறது. ஆனால், இந்த விதிமுறையை பீட்டா பின்பற்றவே இல்லை என்பது பட்டவர்த்தனமாக தெரியவந்துள்ளது. பீட்டா தலைமையகத்துக்கு கொண்டு வரப்பட்ட 84% விலங்குகள், 24 மணி நேரத்துக்குள் கொலை செய்யப்பட்டுள்ளன. இதனை கருணை கொலை என்கிறது பீட்டா. ஆனாலும்
கொண்டு வரப்பட்ட விலங்குகள் எதுவும் உடல் நலம் பாதிக்கப்பட்டவையோ, காயமடைந்து உயிருக்கு போராடும் வகையில் இருந்ததாகவோ பீட்டா கூறவில்லை. 15 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில், 24 மணி நேரத்துக்குள் விலங்குகளை கொலை செய்ய அப்படி என்ன தேவை வந்தது என்பதற்கு பீட்டாவிடம் பதில் இல்லை. ஆக, நன்றாக இருந்த நாய் மற்றும் பூனைகளை ஏன் பீட்டா கொல்ல வேண்டும்?.

சரி கருணை கொலை செய்ததாகவே வைத்துக் கொள்வோம். சோறு போடும் சாமியாக தமிழர்கள் கருதும் காளைகளையும், அவற்றை சிறப்பிக்க நடத்தும் திருவிழாவான ஜல்லிக்கட்டையும் துன்புறுத்தல் என்று கூறும் பீட்டா அமைப்பு, கருணை கொலைக்கு பதில் அந்த விலங்குகளை காப்பாற்றுவதற்கான வழியை மேற்கொண்டிருக்கலாமே. இதை செய்வதற்கு பீட்டாவிடம் நிதி உதவி இல்லை என்று கூற முடியாது. உலகம் முழுதும் 3 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள சினிமா மற்றும் விளையாட்டுத் துறை பிரபலங்களை இவர்கள் விளம்பரத் தூதர்களாக நியமிக்கிறார்கள். பல லட்சம் சம்பளம் வாங்கும் வழக்கறிஞர்களை வைத்து, வழக்குகள் நடத்த பல நூறு கோடிகளை செலவிடுகிறார்கள். அக்கவுண்டில் பல்க்காக பணம் வைத்திருக்கும் அந்த அமைப்புக்கு நாய், பூனைகளை காப்பாற்ற எவ்வளவு செலவாகி இருக்கப் போகிறது.

பீட்டாவின் நோக்கம் விலங்குகள் நலன் இல்லை, அதையும் தாண்டி அதில் வேறு ஏதோ காரணம் இருப்பதாக PKA அமைப்பு சந்தேகிக்கிறது. அதற்கும் ஒரு எவிடென்ஸை காட்டுகிறது அந்த அமைப்பின் இணையதளம்.2010-ம் ஆண்டு, பீட்டாவிடம் நாய் ஒன்றை ஒப்படைக்க விர்ஜீனியாவை சேர்ந்த பெண் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் “நாங்கள் எந்த விலங்கையும் ஏற்றுக் கொள்வதில்லை” என்று அதன் நிர்வாகிகள் பதிலளித்துள்ளனர். உடனே அந்த பெண், இந்தத் தகவலை விர்ஜீனியா விவசாயம் மற்றும் வாடிக்கையாள சேவை மையத்திடம் புகாராக தெரிவிக்கிறார்.

“தாங்கள் விலங்குகள் காப்பகத்தை நடத்தி வருவதாக பதிவு செய்துள்ள பீட்டா ஏன் இப்படி சொல்ல வேண்டும்” என்று யோசித்த அதிகாரிகள், பீட்டா தலைமை அலுவலகத்துக்கு திடீர் விசிட் அடித்தனர்.அந்த ஆய்வு பற்றிய அறிக்கையை டேனியல் கோவிச் என்ற அதிகாரி சமர்ப்பித்திருக்கிறார். அந்த அறிக்கையும் அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

அதில் “ பீட்டாவின் வரவேற்பாளர், தாங்கள் எந்த வித விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுப்பது இல்லை என்று கூறியுள்ளனர். கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகளும் இதே பதிலை தந்தனர். ஆனால் சற்று நேரம் கழித்து வந்த, உயர் அதிகாரி ஒருவர், அங்கிருந்த மூன்று அறைகளைக் காட்டி இவற்றில் தான் விலங்குகள் பாதுகாக்கப்படுவதாக கூறினார். அந்த மூன்று சிறிய அறைகளைத் தவிர வேறு அறைகள் அங்கு இல்லை. இந்த காப்பகம் பொதுமக்களிடம் இருந்து விலங்குகளை ஏற்றுக்கொள்வதில்லை. பீட்டா ஊழியர்கள் மூலம் கொண்டு வரப்படும் விலங்குகள் மட்டுமே இங்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்” என்று ஆய்வில் நடந்தவற்றை அந்த அதிகாரி பதிவு செய்திருக்கிறார்.

மேலும் ஆய்விலிருந்து தெரியவருவது “ கடந்த சில ஆண்டுகளில் அந்த அமைப்பு கையாண்ட விலங்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. ஆனால், விலங்குகளை வைக்கும் இடம் சிறியதாக இருக்கிறது. இது அரசின் நெறிமுறைகளுக்கு உட்படாத வகையில் உள்ளது. பீட்டா தனக்கென்று உருவாக்கிக் கொண்ட விதிமுறைகளைக் கூட இங்கு பின்பற்றவில்லை. இவ்வளவுக்கும் மேல், பீட்டாவின் ஊழியர்களுக்கு இங்கு விலங்குகள் காப்பகம் செயல்படுவதே தெரியாமல் இருந்திருக்கிறது. மேலும், பீட்டாவில் எடுத்துக் கொள்ளப்பட்ட 85% விலங்குகளை, 24 மணி நேரத்துக்குள் கருணை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது, அந்த அமைப்புக்கு விலங்குகளை பராமாரித்து வேறு காப்பகங்களுக்கோ, தத்துக் கொடுக்க முயற்சிப்பதோ நோக்கம் இல்லை என்பது தெளிவாகிறது” என்று அறிக்கையில் போட்டு உடைத்திருக்கிறார் டேனியல்.

இது மட்டும் அல்ல, இன்னும் பீட்டா திரைக்கு பின் செய்யும் அநீதிகள் ஏராளமாக இருப்பதாகவும் PKA அமைப்பு தெரிவிக்கிறது. இந்தியாவில் மட்டும் அல்ல, உலக அளவில் பீட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ள வரி விலக்கை நீக்கவும் அந்த அமைப்பு, அரசாங்கத்துக்கு குரல் கொடுக்க தனது இணையதளம் மூலம் அழைக்கிறது. இந்த குற்றச்சாட்டுகள் எதற்கும் பீட்டா பதிலளிக்கவும் இல்லை, அதே சமயம் சட்டை செய்யவும் இல்லை. இதெல்லாம் பீட்டா மீதான அவதூறாகவே இருந்தாலும், ஏன் சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பீட்டாவுக்கு இருக்கும் பண பலத்துக்கு, சட்ட நடவடிக்கைகளால் அந்த இணையதளத்தை முடக்கி இருக்க முடியும். ஏன் இது எதையும் செய்யவில்லை பீட்டா? கொஞ்சமல்ல.. நிறையவே விசாரிக்க வேண்டும்- இந்த பீட்டாவை!

Related Posts

error: Content is protected !!