பண்டாரத்தியை மஞ்சனத்தி-ன்னு மாத்திப்புட்டோம்யா- கர்ணன் இயக்குநர் அறிவிப்பு

பண்டாரத்தியை மஞ்சனத்தி-ன்னு மாத்திப்புட்டோம்யா- கர்ணன் இயக்குநர் அறிவிப்பு

‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கர்ணன்’. தயாரிப்பாளர் தாணு தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் லால், நடிகை கெளரி கிஷன், ரஜிஷா விஜயன், லட்சுமி பிரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கும். இந்தப் பட த்தில் இடம் பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இந்தப் பாடலை நீக்கக் கோரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விருதுநகர் பகுதியைச் சேர்ந்த ராஜா பிரபு என்பவர் ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அது குறித்த மனுவில் ‘இந்தப் பாடலில் பண்டாரத்தில் என் சக்காளத்தி என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. ஆண்டி பண்டாரம் என்பது மிகவும் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஒரு சமூக பிரிவு. பண்டாரத்தி புராணம் பாடலில் எங்களது இன பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், எங்களது சமூகத்தை காயப்படுத்தும் வகையிலும், வார்த்தைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் விரோதமானது. சட்டத்திற்கு புறம்பானது. ஆகையால், இந்தப் பாடலை நீக்கும் வரையிலும் கர்ணன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி ஆகியோர் தனுஷ், பாடலாசிரியர், பின்னணி பாடகர் தேவா, மாரி செல்வராஜ், கலைப்புலி தாணு, தணிக்கைத் துறை மண்டல அலுவலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுருந்த சூழலில் அந்தச் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை மாற்றி விட்டதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்..

இது குறித்து மாரி செல்வராஜ் அனுப்பியிருக்கும் செய்திக் குறிப்பில், “அனைவருக்கும் அன்பின் வணக்கம். கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான்.

சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிபடுத்தினேன். ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத்தையும் கோரிக்கையையும் முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டாலென்ன … பெயர் மாறுவதால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்துவிட போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் கர்ணன் ஆடுவான் . ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும்…
காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்❤️

—- மாரிசெல்வராஜ்

(குறிப்பு: படத்தில் மாற்றம் செய்யபட்டதை போலவே இணையத்திலும் மாற்றம் செய்யபட்டுவிட்டது. YouTube விதியின் படி ஓரிரு நாளில் தானாக மாறிவிடும்.)” – என்று தெரிவித்துள்ளார்

Related Posts

error: Content is protected !!