அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே – வருமான வரிச்சோதனையால்: அச்சமொன்றுமில்லை =பிபிசி
கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த வருமானவரி துறை சோதனை நிறைவு பெற்றதாகவும் எப்போதும்போல், நேர்மையுடனும் அச்சமின்றியும் செயல்படுவோம் என்று பிபிசி தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த போது அங்கு நடைபெற்ற கலவரம் குறித்து பிபிசி ஆவணப்படம் வெளியிட்டது. அதனை பாரதீய ஜனதா அரசு தடை செய்தது. அதற்கு பிறகு பிபிசியில் இந்த வருமானவரி ஆய்வு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் செவ்வாய் கிழமை தொடங்கி, கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்த வருமான வரி சோதனை நேற்று இரவு முடிவுக்கு வந்தது. இந்த மூன்று நாள் வருமான வரி ஆய்வின் முடிவில், பல்வேறு ஆவணங்களை வருமான வரி துறை அதிகாரிகள் பிபிசி அலுவலகங்களில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பிபிசி அலுவலகங்களில் சோதனை நடத்தியது தொடர்பாக, மத்திய வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், பிபிசி வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி ஒளிபரப்புகளின் லாப விவரங்களுடன் ஒத்துப் போகவில்லை. சில பரிவர்த்தனைகளை பிபிசி நிர்வாகம் கணக்கில் காட்டவில்லை. முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு வருவாய் பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிபிசி வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி ஒளிபரப்புகளில் லாப விவரத்துடன் ஒத்துப்போகவில்லை. டிவி, டிஜிட்டல், ரேடியோ என பிபிசி செய்திகள் மூலம் வரும் வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல் நடைபெற்றுள்ளது. ஆய்வின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. பல்வேறு வருவாய் பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, இதுகுறித்து பிபிசி தனது சோசியல் மீடியா பக்கத்தில் , “வருமான வரிதுறை அதிகாரிகள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறிவிட்டனர். நாங்கள் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை அளிப்போம். விரைவில் இந்த விவகரங்கள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம். தற்போது நாங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளோம். இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பிபிசி ஒரு நம்பகமான, சுதந்திரமான ஊடக அமைப்பு. நாங்கள் எங்கள் சக ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக எப்போதும் நிற்கிறோம். அவர்கள் எப்போதும் அச்சம் அல்லது தயவு இல்லாமல் தொடர்ந்து நேர்மையுடன் செய்திகளை தயார் செய்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.