இந்திய கடற்படையின் பங்கு குறித்து கடற்படை தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு!

இந்திய கடற்படையின் பங்கு குறித்து  கடற்படை தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு!

2021-ம் ஆண்டின் கடற்படை தளபதிகள் நிலையிலான இரண்டாவது மாநாடு இன்று புது டெல்லியில் தொடங்கியது. தொடக்க அமர்வின் போது கடற்படை தளபதிகளிடையே தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.

முக்கிய செயல்பாடுகள், பொருட்கள், தளவாடங்கள், மனித வள மேம்பாடு, பயிற்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கான இந்த மாநாட்டில் இந்திய கடற்படையின் அனைத்து பிரிவு தளபதிகளும் கலந்து கொண்டனர்.

“இந்த மாநாடு நமது நாடு மற்றும் நமது கடற்படை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் குறித்து நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மிக முக்கியமான வாய்ப்பு,” என்று பாதுகாப்பு அமைச்சர் தமது உரையில் கூறினார்.

இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் பங்கு குறித்து பேசிய அவர், “நமது நாட்டின் புவியியல் இருப்பிடம் பல வழிகளில் தனித்துவமானது. மூன்று பக்கங்களிலும் பரந்த கடல் பரப்பளவு அமைந்துள்ள நமது நாடு, யுக்திபூர்வமானதும் வர்த்தகம் மற்றும் வளங்களின் பார்வையில் மிகவும் முக்கியமானதுமாகும்,” என்று கூறினார்.

பொறுப்பான கடல்சார் பங்குதாரராக ஒருமித்த கொள்கைகள் மற்றும் அமைதியான, வெளிப்படையான, விதிகள் அடிப்படையிலான நிலையான உலக ஒழுங்கை இந்தியா ஆதரிக்கிறது என்று கூறிய அவர், இந்த பிராந்தியத்தின் கடல் பகுதியில் முக்கியமான நாடாக இருப்பதால் இப்பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நமது கடற்படையின் பங்கு மிகவும் முக்கியமானது என்றார். இந்த பொறுப்புகளை கடற்படை திறம்பட நிறைவேற்றுவது குறித்து பாதுகாப்பு அமைச்சர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

உலகம் முழுவதும் வேகமாக மாறிவரும் பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளைப் பற்றி பேசுகையில், உறவுகளில் சில நிர்ப்பந்தங்களை இவை ஏற்படுத்துகின்றன என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். எனவே, வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக இந்திய கடல்சார் மண்டலங்களுக்குள் அமைதியையும் நிலைத்தன்மையையும் பராமரிப்பதற்கான அதிக தேவை உள்ளது என்றார் அவர். இப்பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பராமரிப்பதில் இந்திய கடற்படையின் பங்கு வரும் காலங்களில் பன்மடங்கு அதிகரிக்கும் என்று திரு ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.

error: Content is protected !!