வந்துட்டாய்ங்கய்யா.. பாஜக மறுபடியும் ஆட்சிக்கு வந்துட்டாய்ங்க!
நம் நாட்டில் இது வரை நடந்த தேர்தல் வரலாற்றில்,, காங்கிரஸ் கட்சியை தவிர வேறெந்த கட்சி யும், தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததில்லை. அது மட்டுமின்றி, தனிப் பெரும் பான்மை பலத்துடன் காங்கிரஸ் அல்லாத கட்சி, இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க இருப்பதன் மூலம், பாரதிய ஜனதா கட்சி புதிய வரலாறு படைத்து உள்ளது.
ஆம்.. நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த மே 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே பாஜகவின் கை ஓங்கியே இருக்கிறது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக 346 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 90 இடங்களிலும், மற்ற கட்சிகள் 109 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் அதிக அளவில் பாஜக முன்னிலையில் உள்ளது. தமிழகத்தை பொருத்த வரை மூன்று இடங்களில் பாஜக கூட்டணி கட்சி முன்னிலை வகிக்கிறது.
மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் வேண்டும் என்ற நிலையில், அதைவிட அதிக இடங்களில் பாஜக தனித்து முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகள் இணைந்தாலும் 200 இடங்கள் மட்டுமே வரும். எனவே ஆட்சி அமைப்பதில் பாஜகவுக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்ற நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தேர்தல் நிலவரம் குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
‘‘அனைவருக்கும் + அனைவருக்குமான வளர்ச்சி + அனைவரின் நம்பிக்கை = இந்தியாவின் வெற்றி. ஒன்றாக வளர்வோம். ஒன்றாக வளமை பெறுவோம், வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது’’ என மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்