மைசூரு மன்னர் மேரேஜ் படு கிராண்டா நடந்து முடிஞ்சுட்டுது!
மைசூரில் உள்ள அம்பாவிலாஸ் அரண்மனையின் திருமண மண்டபத்தில் உடையார் மன்னர் குடும்பத்தின் 27-ஆவது பட்டத்து இளவரசரான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தின் டங்கர்பூர் மன்னர் குடும்பத்தின் வாரிசான ஹர்ஷாவர்தன் சிங்- மாஹேஸ்ரீ குமாரி ஆகியோரின் மகளும் பட்டத்து இளவரசியுமான திரிஷிகா குமாரி சிங்குக்கும் திருமணம் நடைபெற்றது.
மைசூரு மன்னராக கடைசியாக இருந்தவர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார். இவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து மன்னர் வாரிசாக யதுவீரை(வயது24), மகாராணி பிரமோதாதேவி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தத்தெடுத்தார். இவர், மறைந்த மன்னர் ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் தங்கையின் மகன் ஆவார். யதுவீர் மன்னர் வாரிசாக தத்தெடுக்கப்பட்ட பிறகு அவருக்கு, யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் என்று பெயர் சூட்டப்பட்டது. யதுவீர் அமெரிக்காவில் படித்தபோது, அவருடன் படித்த ராஜஸ்தான் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி திரிஷிகா குமாரியுடன் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து யதுவீருக்கும், திரிஷிகா குமாரிக்கும் திருமணம் செய்து வைக்க மகாராணி பிரமோதாதேவி முடிவு செய்தார்.
அதன்படி திட்டமிட்டு திருமண மண்டபம் தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மைசூரு மாநகரமே வண்ண விளக்குகளால் விழாக் கோலம் பூண்டிருந்தது.உடையார் மன்னர் குடும்ப 26-ஆவது பட்டத்து இளவரசராக இருந்த மறைந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் பயன்படுத்திய 1953-ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட வெளிநாட்டு காரில் மானதவிலாஸ் நுழைவு வாயில் வழியாக மைசூரு அரண்மனையில் நுழைந்த யதுவீர், வெளிர் சிகப்பு நீளமான கோட், மைசூரு தலைப்பாகை, மல்லிகை மாலை அணிந்திருந்தார்.
மணமகள் திரிஷிகா, மைசூரு பட்டுச் சேலையை அணிந்திருந்தார். திருமண மண்டபம் மல்லிகை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனால் மண்டபம் முழுவதும் மல்லிகை வாசம் வீசியது.யதுவீர் மற்றும் திரிஷிகா இருவரும் பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுத்து திருமண மண்டபத்திற்குள் அழைத்து செல்லப்பட்டனர். புரோகிதர்களின் வழிகாட்டுதல்படி கெüரி பூஜை, கணபதி பூஜை, மதுபார்கா, புருஹஸ்பதி, மஹாசங்கல்பா, கோத்ரபிரவாரா, அக்ஷதரோபணா, கங்கணா தாரணா, தாக்ஷôயினி பூஜை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, யதுவீர் மற்றும் திரிஷிகா இருவரும் மாலைகளை மாற்றிக் கொண்டனர். காலை 10.25 மணிக்கு அக்னி சாட்சியாக கார்காடக லக்னம், சாவித்ரி முகூர்த்தத்தில் வேத விற்பன்னர்களால் வேத வாக்கியங்கள் ஓத, திரிஷிகா குமாரி சிங் கழுத்தில் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் திருமாங்கல்யம் கட்டினார்.
நாகஸ்வரம் முழங்க, மண்டபத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் இருவரையும் அட்சதை தூவி வாழ்த்தினர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் உடையார் மன்னர் குடும்ப பட்டத்து மகாராணி பிரமோதாதேவியிடம் ஆசி பெற்றனர்.
அதன்பிறகு, கிரிஜா கல்யாண மண்டலத்தில் நடந்த நிகழ்ச்சியில் திரிஷிகாவின் கால்விரல்களில் யதுவீர் மெட்டி அணிவித்தார். அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு நடந்தது. சப்தபதி சடங்குக்காக திரிஷிகா, ஏழு அடிகளை எடுத்துவைத்து மணமகன் வீட்டில் நுழைந்தார்.
இதைத் தொடர்ந்து, சாமுண்டீஸ்வரி, உத்தனஹள்ளி, மேலுகோட்டே, நஞ்சன்கூடு, ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள 21 கோயில்களின் அர்ச்சகர்கள் மூலம் பிரசாதம் புதுமண தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது.
மாலை 6.30 மணிக்கு அம்பாவிலாஸில் உள்ள தனியார் அரசவையில் நடந்த உய்யாலே மற்றும் உருட்டாணே விழாவில் மன்னர் குடும்பத்தினர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
இதில் ஆளுநர் வஜுபாய் வாலா, முதல்வர் சித்தராமையா, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ஆர்.வி.தேஷ்பாண்டே, மகாதேவப்பா, மகாதேவ பிரசாத், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலத்தின மன்னர் குடும்பத்தினர், வெளிநாட்டு தூதர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று யதுவீர்- திரிஷிகாவை வாழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) மைசூரு அம்பாவிலாஸ் அரண்மனையிலும், ஜூலை 2-ஆம் தேதி பெங்களூரில் உள்ள அரண்மனையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.