முன்னா- பட விமர்சனம்!

முன்னா- பட விமர்சனம்!

தமிழகத்தில் கழைக்கூத்தாடிகள் என்றொரு இனமொண்டு. தொம்பன் சாதி பட்டியல் இனத்தில் வருகிறது. இவர்களில் சரிவரப் படித்தவர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அடுத்த தலைமுறையாவது படித்து முன்னுக்கு வர வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், சாதிச் சான்றிதழை தர மறுத்து இவர்களின் முன்னேற்றத்துக்கு அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுமே இவர்களின் இந்தப் போராட்டம் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது; செவிகொடுத்துக் கேட்கத்தான் ஆளில்லை. இப்படியான சூழலில் சாட்டையடித்து கலைக் கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் பிறந்த ஒருவனுக்கு நாகரீக வாழ்க்கையை அனுபவிக்க ஆசை பிறக்கிறது. அதிஷ்டவசமாக அந்த வாழ்க்கை அவனுக்கு அமைந்து விட, அந்த வாழ்க்கையில் அவன் மகிழ்ச்சியாக இருந்தானா…? என்ற சிந்தனையுடன் ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்திருக்கிறார்கள். முன்னா என்ற டைட்டிலில் வந்திருக்கும் இப்படம் வாழ்க்கையின் அடித்தட்டில் இருப்பவர்கள் காலம் முழுவதும் இப்படியே இருப்பதுதான் சரியோ என்ற கருத்தை கதையாகக் கொண்டிருப்பதால் கவனிக்க வைக்கிறது.

கழைக் கூத்தாடி குடும்பத்தைச் சேர்ந்தவர் படத்தின் நாயகனான சங்கை குமரேசன். மற்றவர்களெல்லாம் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வந்து போகும் காலக் கட்டத்தில் நாம் மட்டும் ஏன் குனிந்த உடம்போடு, கையில் பாத்திரத்தை ஏந்த வேண்டும் என்று யோசித்து தனி ரூட் போட்டு தனக்கென ஒரு பாதையை உருவாக்கி பயணிக்கிறார். அப்படியான சூழலில் நாயகனின் தங்கை உள்ளூர் மைனர் ஒருவரை அவனின் உண்மை முகம் தெரியாமல் காதலிக்கிறாள். அந்தக் காதலை தான் சேர்த்து வைப்பதாக நாயகனும் வாக்குறுதியளிக்கிறார். அதே நேரம் ஹீரோ ஒரு லாட்டரி சீட்டை வாங்க.. அந்த சீட்டுக்கு 2 கோடி ரூபாய் பரிசுப் பணம் கிடைக்கிறது. “இனி இந்த வாழ்க்கை வேண்டாம் கோடி ரூபாயை வைத்து நாம் நிம்மதியாக வாழலாம். வாருங்கள்…” என்று தனது குடும்பத்தினரை அழைக்கிறார் நாயகன். ஆனால் நாயகனின் அப்பாவோ வர மறுத்து மகனை விரட்டி விடுகிறார். தனியாளாகி கோடீஸ்வரனாகி ஒரு பெண்ணைத் திருமணம் செய்கிறார். ஆனால் அதுவே அவருக்கு எமனாக மாறுகிறது. அது என்ன என்பதுதான் முன்னா கதை.

முன்னா நாயகனாக நடித்திருக்கும் சங்கை குமரேசன் இந்த ரோலுக்கு சாலப் பொருத்தமாகி இருக்கிறார் தனது சமூகம் நாகரீக வாழ்க்கைக்கு வர வேண்டும், என்ற எண்ணத்தை வெளிப்படுத்தும் போது, ஒட்டு மொத்த கழைக்கூத்தாடிகளின் வலிகளை எடுத்துரைப்பவர், அதே சமயம், பேராசை எப்படிப்பட்ட இடத்திற்கு நம்மை அழைத்து செல்லும், என்பதையும் தனது நடிப்பால் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

நாயகனின் தங்கை ரோலில் வரும் த நியா கிருஷ்ணன் சிறப்பாக நடித்திருக்கிறார். அந்த வயதுக்கே உரித்தான வெட்கம், சோகம், சிரிப்பு எல்லாவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறார். இவரைக் காதலிக்கும் மைனர் வேடத்தில் நடித்தவரும் குறையில்லாமல் நடித்திருக்கிறார். மேலும் இவரது அப்பாவாக நடித்திருக்கும் ராஜூ உருகி, உருகி தனது தொழிலை தெய்வச் செயல் லெவலுக்குக் கொண்டு போயிருக்கிறார். இவரது அம்மாவான சிந்து, வழமையான அப்பா சொல் மீறாத.. அதே நேரம் பிள்ளைகள் மேல் பாசம் கொண்டிருக்கும் அம்மாவாக நடித்திருக்கிறார். படத்தில் முக்கியக் கதாபாத்திரமே அந்தத் ‘தண்ணி பாம்பு’ கதாபாத்திரத்தில் நடித்தவர் – யாருய்யா இது என்று கேட்க வைக்கிறார்.

டி.ஏ.வசந்தின் இசையில் பாடல்கள் புரியும்படியும், சிந்திக்கும்படியும் உள்ளது. சுனில் லாசரின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. ஒளிப்பதிவாளர் ரவி கதைக்கு ஏற்ப ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, பாடல் காட்சிகளை படமாக்கியது மற்றும் பட காட்சிகள் என முழு படத்தையும் குறிப்பிட்ட சில லொக்கேஷன்களை வைத்துக்கொண்டு முடித்திருப்பவர், தன்னால் முடிந்தவரை லொக்கேஷன்களை வித்தியாசப்படுத்தி காட்ட முயற்சித்திருக்கிறார்.

ஹீரோவாக நடித்திருப்பதோடு, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார் சங்கை குமரேசன். நாடோடிகளாக வாழும் கழைக்கூத்தாடிகளின் துயர வாழ்க்கையை அழுத்தமாக பதிவு செய்திருப்பவர், அவர்களிடம் இருக்கும் நேர்மை மற்றும் நற்பன்புகளையும் அழகாக எடுத்துரைத்திருக்கிறார். ஆனாலும் செய்யும் தொழிலே நல்லது.., அதை மீறி போக நினைப்பது தவறு சொல்ல வருவது போல் கதையை அமைத்து உதட்டை பிதுக்க வைத்து விட்டார்.

மொத்தத்தில் முன்னா -முன்னேறிச் செல்லும் வாய்ப்பை நழுவவிட்டாலும் இப்பட்சி ஒரு களத்தை எடுத்ததற்காகவே பார்க்கலாம்

மார்க் 2.25/5

error: Content is protected !!