இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு – 150 பேர் பலி- பலர் படுகாயம்! – வீடியோ!
இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இன்று ஞாயிறு காலை ஒரே சமயத்தில் ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் குறைந்தது 150 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்புவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 200க் கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இன்று புனித ஞாயிறு திருநாளுக்காக தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த நேரத்தில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்று உள்ளது. நான்கு தேவாலயங்கள் உட்பட மொத்தம் ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து உள்ளதாம். இதனால பீதியான மக்களை பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தும் பணிகளில் அந்நாட்டு ராணுவன் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் . அதே சமயம் இன்று நடைபெற்ற தாக்குதல் குறித்தும், உங்கள் உறவினர்கள் குறித்த உடனடியான தகவல்களைப் பெற இந்த எண்களை தொடர்பு கொள்ளவும் என்று இந்திய ஹை கமிஷன் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளம் எண்களை அறிவித்துள்ளது.
உலகம் முழுக்க கிறிஸ்து இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சியை cஈஸ்டர் என கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இலங்கையில் பிரேயர் செய்ய பலர் கூடியிருந்த நிலையில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் சர்ச், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது தற்போதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சீயோன் ஆலயத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 25பேர் உயிரிழந்துள்ளதுடன் 75பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தககவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு ஹோட்டல்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர். கொழும்புவில் குறைந்தது 43 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அந்தந்த பகுதியில் இருக்கும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீர்கொழும்புவில் குறைந்தது 50 பேர் வரை உயிரிழந்தக்கலாம் என்று அங்கிருக்கும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. காயமடைந்த பலரும் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதே போல குண்டு செயலிழக்கும் பிரிவினர் மற்றும் விசேஷ அதிரடிப்படையினர் உள்ளிட்ட சில பாதுகாப்பு பிரிவுகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவமானது, மனிதாபிமானமற்ற செயல் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷே தெரிவித்தார். கொழும்பு கொச்சிகடை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
🦉இலங்கை குண்டு வெடிப்பு குறித்த தகவல்கள், உதவி தேவைப்படும் இந்தியர்கள் +94777903082 +94112422788 +94112422789 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்#bombblast #SriLanka pic.twitter.com/hsisDhcWxZ
— Aanthaiyaar (@aanthaiyar) April 21, 2019
அதே சமயம் கொழும்புவில் உள்ள இந்திய உயர் ஆணையருடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்வீட் செய்துள்ளார்.