March 21, 2023

ஜாம்பவான் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருந்த தோனி, 2020 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். சரியாக 74வது சுதந்திர தினமான நேற்று இரவு 7.29 மணிக்கு தன் ஓய்வை அறிவித்து விட்டார்.

தோனி 2004 ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 2007 ல் இந்திய அணியின் கேப்டனாக பதவி ஏற்ற அவர் இந்திய அணிக்கு 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகியவற்றை வென்று கொடுத்தார்.டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி முதன்முறையாக தரவரிசையில் முதல் இடம் பெற்றதும் தோனியின் தலைமையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 2014இல் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும், 2017இல் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார். மேலும் 2014 ல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீர் ஓய்வை அறிவித்த அவர் தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வந்தார். 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என அப்போது வதந்திகள் வலம் வந்தன.

எனினும், தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வை அறிவிக்கவில்லை. அதே சமயம், இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை. சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி விலகி இருந்தார்.இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடருக்கு தயார் ஆகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள தோனி திடீரென ஆகஸ்ட் 15 அன்று இரவு 7.29 மணிக்கு ஓய்வை அறிவித்தார். இது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு வெளியிட்டுள்ளார்.

தோனி தன் பதிவில், “உங்கள் அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றிகள் பல. 1929 மணி முதல் நான் ஓய்வு பெற்றதாக கருதுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். ரயில்வே நேர முறைப்படி 7.29 என்பதை 1929 என குறிப்பிட்டுள்ளார் தோனி. அவரது ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கண்ணீர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள தகவலில், ” உங்களுடன் (தோனி) விளையாடுவதை தவிர வேறு என்ன விரும்பினேன். நெஞ்சம் முழுவதும் பெருமையுடன், நான் உங்களுடன் இணைகிறேன். நன்றி இந்தியா. ஜெய்ஹிந்த்,” என குறிப்பிட்டுள்ளார்.