வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுக்கு . 90 சதவிகித நுரையீரல் பாதிப்பு!
வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் உடல் நிலை பாதிப்படைந்துள்ளதால் அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு. கடந்த 13-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இறந்த தகவல் கிடைத்ததை அடுத்து முதல்வரைக் கண்டு துக்கம் விசாரிக்க அமைச்சர் துரைக்கண்ணு சென்னையிலிருந்து சேலம் கிளம்பிச் சென்றார். கார் திண்டிவனம் அருகே சென்றபோது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்த அவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூச்சுத்திணறலுக்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 4 மணி முதல் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
இச்சூழலில் காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
“வேளாண் துறை அமைச்சர் ஆர். துரைக்கண்ணு (72) கடந்த 13-ம் தேதி கடுமையான மூச்சுத் திணறலால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு இணை நோய்கள் உள்ளன. 90 சதவிகித நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது எக்மோ கருவி மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் உள்ளார்.
முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்து, தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்களுடன் பேசினார். மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயகுமார் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள துரைகண்ணுவை மருத்துவ வல்லுநர்கள் குழு கண்காணித்து வருகிறது.”