தமிழ் நாட்டில் விற்பனை செய்யப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம்!- மத்திய அரசு!

தமிழ் நாட்டில் விற்பனை செய்யப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகம்!- மத்திய அரசு!

“நாடு முழுவதும் விற்கப்படும் பெரும்பாலான பால், குடிப்பதற்குப் பாதுகாப்பானது. ஆனால் 7% பால் குடிப்பதற்கு ஏற்றதல்ல. அதில் சோப்பு பொருள், யூரியா போன்றவை கலந்துள்ளன. நாங்கள் சேகரித்த 12 பால் மாதிரிகளில், இந்த சோப்புப் பொருள்கள் கலந்திருந்தன” என உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைவர் கடந்த மாதம் கூறி இருந்தார். அதிலும்  அஃப்லா டாக்சின் எம் 1 அதிகமாகப் பயன்படுத்தும் 3 மாநிலங்களில், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்றும் தெரிவித்திருந்த செய்தி மக்களிடம் முழுமையாக சென்றடையாத நிலையில் தமிழ் நாட்டில் விற்பனை செய்யப்படும் பாலில் நச்சுத்தன்மை அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. 20 அமர்வுகளை கொண்ட இக்கூட்டத் தில் விவசாயி கடன், கூடங்குளம் விவகாரம், பால் உற்பத்தி, முல்லை பெரியாறு என பல்வேறு பிரச்சனைகள் குறித்து தமிழக எம்.பிக்கள் சம்மந்தப்பட்ட அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் விநியோகிக்கப்படும் பால் பொது மக்கள் உபயோகப்படுத்துவதற்கு தகுந்ததாக உள்ளதா என்றும் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை அதிகமாக உள்ளதா என்றும் திமுக எம். பி. டி.ஆர்.பாலு மத்திய அரசுக்கு கேள்விக்கு எழுப்பியிருந்தார்.

இதற்கு மக்களவையில் எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, நாட்டில் விநியோகிக்கப்படும் பாலில் 6,432 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன . அந்த 6,432 மாதிரிகளில் 338 மாதிரிகளில் Aflatoxin M1 என்ற நச்சுத்தன்மை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளில் 5.7% என்றும் தமிழகத்தில் மொத்தம் 551 பால் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 88 மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பது கண்டறியப் பட்டதாக அவர் தெரிவித்தார். அதே போல டெல்லியில் சேகரிக்கப்பட்ட மொத்தம் 262 மாதிரிகளில் 38 மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகமாக உள்ளது என்றும் கேரளா எடுக்கப்பட்ட 187 மாதிரிகளில் 37 மாதிரிகள் நச்சுத்தன்மை அதிகம் கொண்டவை என்றும் அவர் கூறினார்.

ஆரம்பத்தில் சொன்னது போல் உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் இது கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், பாலில் Aflatoxin M1 என்ற நச்சுத் தன்மை இருப்பது வழக்கமான ஒன்று தான் என்றும் இருப்பினும் அது அளவை மீறுகின்றபோது மனித உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!