கொரோனா பரவலை மதிப்பிட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுவதும் ஆய்வு!

கொரோனா பரவலை மதிப்பிட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுவதும் ஆய்வு!

இந்தியாவின் பல மாநிலங்களை முடக்கி போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் அளவில் பார்க்கும்போது குறைந்து வருவதாக தோன்றினாலும், நாட்டின் பல மாநிலங்களின் கோர தாண்டவமாடிக் கொண்டுதானிருக்கிறது.கொரோனா வைரஸின் இரண்டாம் அலையில் சிக்கி போராடி வந்த டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று எண்ணிக்கை தற்போது பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் அது ஏறுமுகத்தில் இருக்கிறது. அதேபோன்று, ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் நிலைமையை சரிவர கணிக்க முடியவில்லை. எனவே, இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை சீராக குறையவில்லை என்றும், சில மாநிலங்கள் இனிதான் உச்சத்தை காண உள்ளதாகவும் பலர் கருத்து கூறி வரும் சூழலில் இந்த கொரோனா பரவலை மதிப்பிட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுவதும் ஆய்வு நடத்த உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொரோனா பரவலை மதிப்பிடுவதற்காக நாடு முழுவதும் ‘செரோ’ ஆய்வை தொடங்க உள்ளது. அதுபோல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இத்தகைய ஆய்வை நடத்த வேண்டும். இதன்மூலம் அனைத்து புவியியல் சார்ந்த தகவல்களையும் பெற முடியும்.நாட்டில் கொரோனா நிலவரம் சீராகி வருகிறது.

கடந்த மே 7-ந் தேதி தினசரி கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டது. அதனுடன் ஒப்பிடுகையில், தினசரி கொரோனா பாதிப்பு 78 சதவீதம் குறைந்துள்ளது. அதுபோல், வாராந்திர கொரோனா பாதிப்பு விகிதம், கடந்த ஏப்ரல் 30-ந் தேதிக்கும், மே 6-ந் தேதிக்கும் இடையிலான வாரத்தில் உச்சம் தொட்டிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், வாராந்திர பாதிப்பு விகிதத்தில் 74 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்து வருவதற்காக பொதுமக்கள் மெத்தனமாக இருக்கக்கூடாது. கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைத்தால்தான், நாட்டின் சுகாதார கட்டமைப்பு மீதான அழுத்தம் குறையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!