ஒரு குழந்தையே போதும் என்று நினைக்கும் பெண்கள் அதிகம்! – சர்வே ரிசல்ட்
தங்கள் வருமானம், பொருளாதார சூழ்நிலை, பணிச் சுமை, தனிக்குடித்தனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இப்போதெல்லாம் குழந்தை பெற்றுக் கொள்வதையே தள்ளிப்போடுவது ஒரு புறம் நடந்து வருகிறது. மேலும் பல குடும்பங்களில் ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்வதுதான் நடக்கிறது. மிகச் சிலர் மட்டுமே தங்களின் குழந்தைகளுக்கு சகோதர உறவு வேண்டும் என்ற ஆசையில் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வார்கள். இந்நிலையில் இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களில் 35 சதவிகிதத்தினர் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதைத் தவிர்ப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
அசோசம் சமூக அபிவிருத்தி அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2வது குழந்தை பெற்றுக்கொள்வதை வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் தவிர்ப்பதாகக் கூறப்பட்டுள்ளது. திருமணங்களில் உள்ள மன அழுத்தம், வேலைப் பளு, குழந்தைகளை வளர்ப்பதற்கு ஏற்படும் செலவுகள் போன்றவை இதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன..
மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களைச் சேர்ந்த வேலைக்குச் செல்லும் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒரே ஒரு குழந்தை மட்டும் உள்ள 1500 பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தங்களின் குழந்தைகளுடன் அவர்கள் செலவிடும் நேரம், அவர்களது திட்டம் மற்றும் அடுத்த குழந்தையை பெற்றுக்கொள்வது அல்லது பெற்றுக்கொள்ளாததற்கான காரணங்கள் குறித்து கேட்கப்பட்டன. அவர்களில் 500 பேர், அடுத்த குழந்தையை பெற்றுக்கொள்வதற்காக பேறுகால விடுப்பு எடுப்பது தங்களின் வேலை மற்றும் பதவி உயர்வுக்குத் தடையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலர், ஒரு குழந்தையை பெற்றுக்கொள்பவர்களுக்கு வரியைக் குறைப்பது உள்ளிட்ட வகைகளில் அரசாங்கம் உதவ வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதேவேளையில், 65 சதவிகிதம் பேர் தங்கள் குழந்தை தனிமையாக இருப்பதை விரும்பவில்லை என்றும் தங்களின் உடன்பிறப்புகளுடன் பகிர்ந்தளிப்பதில் ஏற்படும் மகிழ்ச்சியை அவர்கள் உணர்ந்துகொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று தெரிவித்துள்ளதார்களாம்!