நம்ம மகாபலிபுரத்தில் பிரதமர் மோடி & சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு ஏற்பாடு!

நம்ம மகாபலிபுரத்தில் பிரதமர் மோடி & சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு ஏற்பாடு!

நம்ம மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆமாமுங்கோ.. முதல் முறையாக இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் நிகழ்வு தமிழகத்தில் நடைபெற உள்ளது. 

நாட்டின் ஜனத்தொகையை அதிகரிப்பதில் கடும் போட்டி போடும் இந்தியா-சீனா இடையே உறவு களை மேம்படுத்தவும், சர்வதேச நிலைமைக்கு ஏற்ப பொருளாதார வளர்ச்சிகளை கொண்டுவரவும் இருநாட்டு தலைவர்களும் முடிவு செய்தனர். இதற்காக பிரதமர் மோடியை சீனாவுக்கு வருமாறு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அழைத்தார். அதை ஏற்று பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந்தேதி சீனா சென்றார். சீனாவில் உள்ள ஊகான் நகரில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்கள். ஏப்ரல் 27, 28-ந்தேதிகளில் இரு நாட்கள் நடைபெற்ற அந்த கூட்டத்தில் பல்வேறு புதிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த சந்திப்பை தொடர்ந்து இந்தியாவுக்கு வருமாறு சீன அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை சீன அதிபர் ஏற்றுக் கொண்டார். அவர் அடுத்த மாதம் இந்தியா வருகிறார். இதன் மூலம் இந்தியா- சீனா இரு நாடுகள் இடையிலான நட்பை மேம்படுத்த இரு நாட்டுத் தலைவர்களும் 2-வது முறையாக சந்திக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்தியாவில் எந்த நகரில் சந்தித்து பேச வைப்பது என்று இரு நாட்டு அதிகாரிகளும் தீவிர ஆய்வு செய்தனர். சென்னை, ஐதராபாத், பெங்களூர், விசாகப் பட்டினம் உள்ளிட்ட 6 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இறுதியில் சென்னை மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்களையும் சந்திக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த மாதம் 11-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை மாமல்லபுரத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பிரதமர் மோடி அக்டோபர் 10-ந் தேதியே சென்னை வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுநாள் 11-ந்தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் சீனாவில் இருந்து சிறப்பு விமானத்தில் நேரடியாக சென்னை வருவார் என்றும், சென்னை விமான நிலையத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்றும், பிரதமர் மோடியே விமான நிலையத்துக்கு வந்து சீன அதிபரை வரவேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன் பிறகு இரு நாட்டு தலைவர்களும் மாமல்லபுரம் சென்று, அங்கு நடக்கும் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உறவுகளை மேம்படுத்தும் பேச்சு நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு மோடியும், ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் காலத்து சிற்பங்களையும், வரலாற்று சின்னங்களையும் பார்வையிடுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மோடி, ஜி ஜின்பிங் சந்திப்புக்கான ஏற்பாடுகளை இரு நாடுகளின் உயர் அதிகாரிகளும் செய்து வருகிறார்கள். சமீபத்தில் சீன அதிகாரிகள் குழு மாமல்லபுரம் வந்து ஜி ஜின்பிங்கை எங்கெங்கு அழைத்து செல்ல வேண்டும் என்று பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆலோசித்தது. சீன உயர் அதிகாரிகள் குழு மீண்டும் மாமல்லபுரம் வர உள்ளது. அப்போது மாமல்லபுரத்தில் எந்தெந்த வரலாற்று சின்னங்களை ஜி ஜின்பிங்க்குக்கு காட்டுவது என்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படும்.

மேலும் மோடி, ஜி ஜின்பிங் இருவரும் 2 நாட்கள் மாமல்லபுரத்தில் இருப்பதால் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. முப்படை வீரர்களையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்களும் சந்திக்கும் இடம், தங்கும் இடம் பற்றி மத்திய வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகள், தமிழக அரசுடன் பேசி வருகிறார்கள். இடங்கள் முடிவு செய்யப்பட்டதும், தமிழக அரசு மற்ற உள்கட்டமைப்பு பணிகளை செய்து கொடுக்கும்.

மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டு சர்வதேச ராணுவ கண்காட்சி நடத்தப்பட்டது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த அந்த ராணுவ கண்காட்சி மிகப்பெரிய வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மாமல்லபுரத்துக்கு சீன அதிபர் வர உள்ளார்.

பொதுவாக வெளிநாட்டு தலைவர்கள் வரும்போது அவர்களை டெல்லியில் தான் இந்திய பிரதமர் சந்திப்பார். முதல் முறையாக தமிழ் நாட்டில் சீன அதிபர்- இந்திய பிரதமர் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!