மதுரை அழகர் பச்சை பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார்! – ஏன்? & அதனால்?

மதுரை அழகர் பச்சை பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார்! – ஏன்? & அதனால்?

சர்வதேச அளவில் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, மீனாட்சியம்மன் கோயில் திருத் தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பச்சைப் பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். இந்த நிகழ்வை காண அங்கு குவிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர். வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளியதையொட்டி புனித நீர் பக்தர்கள் மீது பீய்ச்சியடிக்கப்பட்டது. இதையடுத்து, ராமராயர் மண்டபத்துக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.

இந்த அழகர் வைகையில் இறங்குவதன் பின்னணி குறித்து இரண்டு விதமான தகவல்கள் உள்ளன

அழகர் மலையில் முனிவர் ஒருவர் வாழ்ந்து கொண்டிருந்தார். அங்குள்ள அழகர் தீர்த்தத்தில் அவர் நீராடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்தார் துர்வாச முனிவர். குளியலில் மூழ்கி யிருந்த , துர்வாசரை கவனிக்கத் தவறிவிட்டார். இதனால் வெகுண்டெழுந்த துர்வாசர் , முனிவர் தம்மை அவமதித்தார் என்று கூறி மண்டூகமாக (தவளையாக) உருமாறுமாறு சாபமிட்டு விட்டார். இந்த சாபத்தால் பதறிப்போன அழகர் மலை முனிவர் , உடனடியாக துர்வாச முனிவரிடம் மன்னிப்பு கேட்டு தனக்கு சாப விமோசனத்தை அருள வேண்டினார். மனமிறங்கிய துர்வாசர், “ கொஞ்ச காலம் வைகை ஆற்றில் தவளையாக வசித்து அழகரை பிரார்த்தனை செய், சாப விமோசனம் உண்டு என்றார். தவளையாக ஆற்றில் வசித்து வந்த மண்டூக முனிவர் அழகரை வணங்கியபடியே இருந்தார். அவரது பிரார்த்தனை அழகரை சென்றடைந்தது. மண்டூக முனிவரின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்த அழகர் வைகையில் மண்டூக முனிவருக்கு தச அவதாரக் காட்சிகளுடன் காட்சி தந்தார். இந்நிகழ்வு, வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளி முனிவருக்கு பாபவிமோசனம் வழங்குவதாக முதல் முதலாக சோழவந்தானில் கொண்டாடப்பட்டது.

அழகர் ஆற்றில் இறங்குவதன் பின்னனியில் இப்படி ஒரு தகவல் இருந்தாலும் , இன்றைக்கு வைகையில் அழகர் இறங்குவதன் பின்னணியில் அன்னை மீனாட்சியின் திருமணம் உள்ளது. ஆம்.. உள்ளூர் பிரமுகர் திருமணம் என்றாலே மதுரை போன்ற நகரங்களில் களை கட்டும். அகில உலக நாயகி அன்னை மீனாட்சியின் கல்யாணம் என்றால் ….. தெருவுக்கு தெரு பந்தலும் தோரணங்களும் என அழகுற காட்சி தரும் மதுரை பல வரலாற்று நிகழ்வுகளின் சாட்சியாக நிலைத்து நிற்கிறது.

பாண்டிய நாட்டின் இளவரசி தடாகை என்னும் மீனாட்சி போர்கலைகளில் கொடி கட்டி விளங்கி சென்ற இடமெல்லாம் பாண்டிய நாட்டின் வெற்றிக் கொடியை ஏற்றி வந்தாள். வெற்றித் தொடரின் இறுதியில் திருகைலாயம் சென்றபோது சிவனை எதிர்த்து போரிட்டவள் அவர் மீதான காதலில் தன் மனம் இழந்தாள். இந்த போரும் வெற்றி தான். ஆம் பாண்டிய நாட்டு மருமகனாக எம்பெருமான் சிவனை கொண்டு வந்தது மாபெரும் வெற்றிதானே. போர்க்காயங்களை வெற்றித்தழும்புகளை சிவனின் காதல் மடை மாற்றியது. மாறாத காதலுடன் மதுரை திரும்பிய தடாகை அன்னை மீனாட்சியானாள்.

அன்னை மீனாட்சியை மதுரையில் கரம் பிடித்து திருமணக்கோலம் கண்டார் சுந்தரேசர். தமக்கை மீனாட்சியின் திருமண வைபவத்தில் கலந்து கொள்ள சகோதரர் அழகர், மதுரையிலிருந்து 25கிமீ தொலைவில் உள்ள அழகர் மலையிலிருந்து புறப்பட்டார். அந்த கால கட்டத்தில் அழகர் மலைப் பகுதியில் கள்ளர்கள் (திருடர்கள்) அதிகம். எனவே அழகர் கள்ளர் வேடமிட்டு கள்ளழகராக மாறி தங்கை மீனாட்சிக்கு சீர் கொண்டு வந்த பொருட்களை பாதுகாத்து வைகை ஆற்றின் அருகே வந்தடைந்தார். அதற்குள் மீனாட்சி கல்யாணம் நடந்து முடிந்தது என்பதை அறிந்த அழகர் பெருங் கோபம் கொண்டு வைகை ஆற்றில் இறங்கினார். தமது சகோதரர் அழகரின் கோபம் அறிந்த மீனாட்சி தனது கணவரான சுந்தரேஸ்வரருடன் வைகை ஆற்றிற்கே சென்று ஆசி பெற்று சீர் பொருள்களை பெற்றார். இன்றைக்கும் இந்த சடங்குகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதைப்போலவே மதுரையின் மூன்று மாவடியிலிருந்து தல்லாகுளம் வரை அழகரை வரவேற்று எதிர்சேவை என்ற நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடத்தப்பட்ட. இந்நிகழ்சியில் ஏராளமானோர் கோவிந்தா கோஷம் விண்ணதிர பங்கேற்று அழகரை வரவேற்கின்றனர். அதன்படி இன்று  பச்சைப் பட்டு உடுத்தி அழகர், தனது பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளார். அழகர் உடுத்தும் பட்டின் நிறத்திற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது? அதற்கான காரணம் என்ன என்று அறிய விருப்பமா??

எதிர்சேவை செய்ய பல்லக்கில் வரும் கள்ளழகர், தல்லாகுளம் பெருமாள் கோவிலில்தான் குதிரை வாகனத்திற்கு மாறுவார். அங்குதான் ஆற்றில் இறங்கும் போது அழகர் உடுத்தும் பட்டின் நிறமும் தீர்மானிக்கப்படுகிறது.

பொதுவாக பச்சை, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் ஏதாவது ஒரு நிறத்தில் அழகர் பட்டு உடுத்துவது வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

அழகர் பச்சை பட்டு உடுத்தினால், அந்த ஆண்டு முழுவதும் இயற்கை வளம் செழிப்பாக இருக்கும், விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.

மஞ்சள் பட்டு உடுத்தினால், அந்த ஆண்டு நோய், பஞ்சம் ஆகியவை தலைவிரித்தாடும் என்பது நம்பிக்கை.

வெண்பட்டு உடுத்தினால் அந்த ஆண்டில் வன்முறை சம்பவங்கள், அமைதியின்மை, கலவரம் ஆகியவை குறையும் என்பது நம்பிக்கை.

சிவப்பு பட்டு உடுத்தி வந்தால் அந்த ஆண்டு மக்களிடையே அமைதியின்மையும், நாட்டில் பல பிரச்சனைகள் தோன்றும் என்பது

இந்த ஆண்டு அழகர் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கியுள்ளார். எனவே இந்த ஆண்டு நமக்கு நல்ல செழிப்பான ஆண்டாக அமையும் என நம்புவோம் என்றாலும் மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவை வாழ்க்கையில் ஒரு முறையேனும் நேரி சென்று கண்டு தரிசிப்பது நல்லது

error: Content is protected !!