மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் – ஐகோர்ட்

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் – ஐகோர்ட்

ருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

‘நீட்’ தேர்வு காரணமாக, தனியார் பயிற்சி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் பணம் செலவளித்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மட்டுமே, மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஏழை மாணவர்களும் ஊரகப் பகுதி மாணவர்களும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே, பெரும் தொகை செலவளித்து தனியார் நீட் பயிற்சி மையங்களில் படித்து மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பை ஓரளவு போக்க, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இதனால் ஓரளவு மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து, தனியார் பள்ளிகள் வழக்குத் தொடர்ந்தது. அதேபோல, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டில் இடமளிக்க வேண்டும் என்று அரசு உதவிபெறும் பள்ளிகள் கோரிக்கை வைத்தது. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று கூறிய ஐகோர்ட், தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கையும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது.

Related Posts

error: Content is protected !!