March 22, 2023

ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த இடைக்காலத் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு!

இக்கட்டான இந்த கொரோனாக் காலக்கட்டத்தில் பல்வேறு தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த இடைக்காலத் தடை விதிக்க மறுத்து, ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் விதிகளை வகுக்க முடியுமா? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்கும்படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல தனியார் பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் வண்ணம் இடையிடையே ஆபாச வலைதளங்கள் குறுக்கிடுவது பெற்றோரைக் கவலையில் வாட்டி வருகிறது. இதுகுறித்து சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த மாணவரின் தாய் சரண்யா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியரின் கவனத்தைச் சிதைக்கும் வண்ணம் பல ஆபாச இணையதள விளம்பரங்கள் இடையிடையே குறுக்கிடுகிவதால் அவர்களின் கவனம் சிதறடிக்கப்படுகிறது. இதனால் அந்த இணைய தளங்களை மாணவர்கள் நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.

அத்துடன், “மாநிலத்தில் 8 சதவீத வீடுகளில் மட்டுமே இணையதள இணைப்புடன் கணினிகள் உள்ளன. டிஜிட்டல் முறையில் பாடம் நடத்துவதால் நகர்ப்புற – கிராமப்புற மற்றும் ஏழை – பணக்கார மாணவர்கள் அரசுப் பள்ளி – தனியார் பள்ளி மாணவர்கள் இடையில் சமநிலையற்ற நிலை உருவாகியுள்ளது.

முறையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர்களும், ஆசிரியர் களும் சவால்களைச் சந்தித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடையூறுகள் உள்ளன. ஆபாச இணையதளங்களை மாணவ, மாணவியர் பார்ப்பதைத் தடுக்கும் வகையில், சட்ட விதிகளின்படி, முறையான விதிகளை வகுக்காமல் ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தடை விதிக்க வேண்டும்” எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொலிக் காட்சி முலம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இதுபோன்ற ஆன் லைன் வகுப்புகளை நடத்த ஏதாவது விதிமுறைகள் உள்ளதா? ஏதாவது திட்டம் உள்ளதா? என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த அரசு வழக்கறிஞர், மாநில அரசு பிரத்யேக கல்வி சேனல் வைத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் தற்போது கொரோனா காரணமாக அனைத்துமே ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், தற்போதைய நிலையில் ஆன்லைன் மூலம் நடத்தப் படும் வகுப்புகளுக்கு எந்த இடைக்காலத் தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஆன்லைன் கல்வியை ஒழுங்குபடுத்த ஏதாவது நிரந்தரத் திட்டம் உள்ளதா? அல்லது அதனைக் கொண்டுவர ஏதேனும் கருத்து உள்ளதா? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 20-–ந் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.