புலிகள் பெயரில் போலி அறிக்கை-அனைத்துலகத் தொடர்பகம் எச்சரிக்கை!
இலங்கைப் புலனாய்வுத்துறையினரால் இயக்கப்படும் போலியான விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு சேறு பூசும் வகையில் அறிக்கை ஒன்றினை வெளியிடவிருந்த சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. தற்போது தமிழர் தாயகத்தில் இடம்பெறவிருக்கும் நாடாளு மன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பல தரப்புக் கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மீது பெரும் குற்றச்சாட்டை முன் வைத்து புலிகளின் பெயரில் போலியான அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத தீட்டப்பட்ட சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது. இது போன்ற சதித்திட்டங்கள் கடந்த காலத்திலும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிட்டதக்கது.
இந்நிலையில் அனைத்துலகத் தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2020ஆம் ஆண்டு சிறீலங்கா நாடாளுமன்றத் தேர்தல் சார்ந்து. அனைத்துலகத் தொடர்பகம் தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழீழம் என்ற தலைப்பில் எதிரிகளால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கும் எமது அமைப்பின் அனைத்துலகத் தொடர்பகத்திற்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என்பதை மக்களிற்குத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
2009ற்குப் பின்னரும் சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழிப்பிற்கு எதிராகவும் அதற்கான சர்வதேச விசாரணையினைக்கோரியும் தாயகத்திலும் ஜ.நா உட்பட சர்வதேசத்திலும் குரல்கொடுத்துவரும் தெளிவான தமிழர் நலன்சார் கொள்கையுடைய கட்சியினை அடையாளம்கண்டு வாக்களிப்பது மிகவும் அவசியமாகும்.
தமிழ் மக்களின் அடிப்படைக்கோட்பாடுகளாகிய தாயகம், தேசியம்,சுயநிர்ணய உரிமை போன்றவற்றை வலியுறுத்தி தமிழினத்தின் விடிவிற்காகக் கொள்கைப் பற்றுறுதியுடன் இயங்குபவர்களைக் கொண்ட கட்சியினைத் தெரிவுசெய்வது காலத்தின் தேவையாகும்.
பல கட்சிகளில் தமிழின உணர்வாளர்களெனக் கூறப்படும் தனிநபர்களைத் தெரிவுசெய்தல் எமக்கு பலம் சேர்க்காது. மாறாகத் தெளிவான தாயகக் கோட்பாட்டுடன் இயங்கக்கூடிய ஒரு கட்சியைத் தெரிவுசெய்வதே பலமாக அமையும். ஆகவே, கடந்த பத்து வருடங்களாக எமது இனத்தினை ஏமாற்றியவர் களையும் தேர்தல் வெற்றிக்காக மட்டும் கூட்டணி சேர்ந்துள்ளவர் களையும் புறம்தள்ளி தமிழின அழிப்பிற்கு எதிரான சர்வதேச விசாரணையைக் கோரியும் தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை நிவர்த்திசெய்யப் பாடுபடுபவர்களையும் கொண்ட கட்சிக்கு வாக்களிக்கவேண்டும்.
எதிரியின் நிகழ்சிநிரலிற்கமைய எமது மக்கள் மத்தியில் கருத்தியல் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான பலமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆகவே மக்கள் கடந்த காலத்தைவிட இனிவரும் காலத்தில் விழிப்புணர்வுடன் தகவல்களை ஆராய்ந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.