மறந்து போகக்கூடிய துரோகமா அது.?- கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம்!

மறந்து போகக்கூடிய துரோகமா அது.?- கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம்!

ஆம்.. மறந்தே போய்விட்டது.

இன்று, ஒரு நாடகத்தின் 10-ம் ஆண்டு நினைவு நாள்.

ஈழ மண்ணில் நடந்தேறிய இனப்படுகொலைக்கு எதிராக, ‘இந்திய அரசே போர் நிறுத்தம் செய்ய அழுத்தம்கொடு-நடவடிக்கை எடு’ என்று தமிழகமே போராடியது. ஆமாம் கண் பார்வையற்ற, உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் வரையிலும் வீதியில் வந்து போராடினார்கள். நாங்கள் என்ன செய்ய முடியும், முதல்வர் பதவி என்பது அதிகாரமற்றதுதானே என்று கலைஞரின் ‘நிலைய வித்துவான்கள்’ ஒத்து ஊதி பாடினார்கள்.

சரி, அந்த அதிகாரமில்லா பதவிக்கு ஏனப்பா, தந்தை பெரியாரை நடுத்தெருவில் விட்டுவிட்டு, ‘பதவி என்ற அதிகாரத்தை பிடித்தால்தான் எதையும் செய்ய முடியும்’ என்று கூறி வெளியேறினீர் கள், என்றால் பதில் இல்லை.

அந்த அதிகாரமில்லா பதவி எதற்கு, ‘என் இனம் அழிந்துகொண்டிருக்கிறது. தடுத்து நிறுத்த முடியா என் முதல்வர் பதவி எதற்கு’ என்று தூக்கி எறிந்துவிட்டு வரமுடியவில்லை. மன்மோகன் சிங்கும்- சோனியாவும் சேர்ந்து கழுத்துக்கு குறுக்காக 2ஜி ஊழல் முறைகேடு என்ற கத்தியை அழுத்தி வைத்து விட்டிருந்தார்கள்.

கலைஞர், அந்த கத்தியை இழுத்துப் பிடித்தபடியேதான் 27.மார்ச்சு 2009 அன்று காலை, மெரினா கடற்கரையில் போய் உண்ணாவிரதம் என படுத்துக்கொண்டார். உலகிலேயே இந்த தினுசில், போராட்டம் நடத்திய ஒரு தலைவரை பார்த்திருக்கவே முடியாது. அதுவும் சில மணித்துளிகள்தான்.

கலைஞரின் உண்ணாவிரதப் போராட்டம் கண்டு நடுங்கிய!!! இலங்கை அதிபர் ராஜபக்சே ‘போர் நிறுத்தம் செய்வதாக’ ஒப்புக்கொண்டுவிட்டார் என்று மத்திய அமைச்சரும், குடியரசுத் தலைவர் பிரணாப்பும் கூறினார்களாம். அப்படிச் சொல்லி மகிழ்ந்து, பழரசம் பருகி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் கலைஞர்.

ஆக, 2ஜி விஷயத்தில் மத்திய அரசை மிரட்டின மாதிரியும் ஆயிற்று. கட்சிக்காரர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இலங்கைத் தமிழர்களுக்கு குரலும் கொடுத்த மாதிரியும் ஆயிற்று, என்று கலைஞர் சாமார்த்தியமாக ஆடிய நாடகம் அது என்று அப்போது யாருக்கும் தெரியாது. அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு. ஆட்ட மேய்ச்ச மாதிரியும் ஆச்சு என்கிற மாதிரி.

பிறகென்ன?

“இலங்கைத் தமிழர்களுக்கு நான்கே நாளில் விடுதலையைப் பெற்றுத் தந்த கலைஞருக்குப் பாராட்டு” என்று போஸ்ட்டர்கூட அடித்து ஒட்டிக்கொண்டார்கள். உலகிலேயே இப்படி ஒரு சமாதானப் புறாவை பார்த்திருக்க முடியாது.

தொடர்ந்து எத்தனை நாடகங்கள்?

உச்சகட்டமாக, திமுகவும்- காங்கிரஸ் கட்சியுமே மக்களோடு மக்களாக நின்று கொண்டு, ‘இந்திய அரசே-இலங்கையில் போர் நிறுத்தம் செய்’ என்று ‘போராடியதுதான்’ வேடிக்கையிலும் வேடிக்கை.

ஆனாலும் அங்கே 2009 மே- மாதம். திட்டமிட்டபடி தமிழின அழிப்பை நடத்தி முடித்துவிட்டான் மகிந்த ராஜபக்சே. இந்த பக்கம் மக்களோடு மக்களாக போராடுவதைப் போலவே நாடகமாடி 2009 மக்களைவை தேர்தலிலும் வெற்றி பெற்றது திமுக-காங் கூட்டணி.

அதன் பிறகு கோத்தபயா ராஜபக்சே கொடுத்த பேட்டிதான் முக்கியம்.

‘இந்தியாவிற்கான போரைத்தான் நாங்கள் நடத்தினோம். சேர்ந்தேதான் நடத்தினோம். ஒவ்வொரு நகர்வும் இந்தியாவுக்கு கூறப்பட்டது. ஆலோசனை பெறப்பட்டது. இந்தியாவை விட எங்களுக்கு தமிழகத்தின் மீதுதான் ஒரு அச்சம் இருந்தது. அங்கே பெரியதாக ஏதும் போராட்டம் வெடித்து, அது இந்திய அரசுக்கு அழுத்தமாக மாறி- எங்களை போர் நிறுத்தம் செய்ய நிர்பந்தித்துவிடக்கூடாதே என கவனமாக இருந்தோம்.” என்றான்.

தமிழினத்திற்காக கலைஞர் போராடிய விதம் பற்றி ராஜபக்சே வகையறா கொடுத்த துரோகச் சான்று இப்படித்தான் இருந்தது.

2014-ல் அடுத்த மக்களவைத் தேர்தல் வந்தது. தொடர்ந்து, மத்திய மந்திரி பதவியில் இருந்த திமுக கடைசி கட்டத்தில் விலகி வெளியே வந்தது. ‘கூடா நட்பு கேடாய் முடிந்தது’ என்று, காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார் கலைஞர். அண்ணா அறிவாலயத்தில் உடன் பிறப்புகள் எல்லாம் தாறுமாறா பட்டாசு வெடித்து மகிழ்ந்தார்கள்.

மறுபக்கம், காங்.கட்சி தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘நாங்கள் தேவை யில்லாமல் முதுகில் தூக்கிச் சுமந்த அழுக்கு மூட்டை திமுக. இறக்கிப் போட்டுவிட்டோம். சுமையில்லாமல் நடக்கின்றோம்’ என்று பதிலுக்குத் துப்பினார்.

அப்போதுதான் கலைஞர், ‘இலங்கைப் போர் விஷயத்தில் நாங்கள் காங்.கட்சியை நம்பினோம். அவர்கள் துரோகம் செய்தார்கள்’ என பல விஷயங்களை போட்டு உடைத்தார். கலைஞர் உண்ணாவிரதம் இருந்த போது ப.சிதம்பரம்தான் ‘போர் நிறுத்தப்பட்டுவிட்டது’ என பொய்சொன்னார் என உடன் பிறப்புகள் பேசிக்கொண்டார்கள்.

காலம் எவ்வளவு கொடியது பாருங்கள். விக்கிரமாதித்தியன் தோளில் இருந்த வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக, மோடி ஆட்சி செய்த கெடுநேரம் இப்போது, ‘திமுக- என்ற அழுக்கு மூட்டையை’ காங்கிரஸ் கட்சி மீண்டும் முதுகில் சுமக்கத் தொடங்கியுள்ளது.

இல்லை என்றால் பாஜக உள்ளே வந்துவிடும் அல்லவா என்ற சாமானியனும், அந்த, ‘அழுக்கு மூட்டைகளின்’ பச்சைத் துரோகத்தை மறக்க வேண்டியதாயிற்று.
இல்லை என்றால் மறந்துபோகக்கூடிய துரோகமா அது.?

இந்த ‘அழுக்கு மூட்டைகளின்’ ஒத்து ஊதும் ஊடக நண்பர்கள்தான் இப்போது, ‘சீமான் போன்ற தமிழ் தேசியம் கும்பல்தான்’ ஈழப்போராட்டத்தைக் கலைத்தது என்று ஆங்காங்கே கதையளந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த காலகட்டத்தில், சீமான் உள்ளிட்ட தமிழ தேசிய ‘கும்பல்கள்’ எல்லாம் களத்திலேயே இல்லை. பிறக்கவும் இல்லை என்று அறியாமலேயே பொய் உரைத்து நிற்கிறார்கள்.

காலம், ‘அழுக்கு மூட்டைகளை‘ வெளுத்து துவைத்து போடாமல் விடாதா என்ன?

பா.ஏகலைவன்- பத்திரிகையாளர்.

error: Content is protected !!