மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று…!

மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று…!

1963ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எழும்பூர் தொடர்வண்டி நிலையம். காவல் துறை புடை சூழ வருகிறார் முதல்வர் பக்தவச்சலம். கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த ஒரு இளைஞன் பக்தவச்சலத்தின் காலில் விழுந்து கதறினான். “ஐயா, தமிழைக் காப்பாற்றுங்கள். இந்தியை நுழைய விடாதீர்கள். நீங்களும் தமிழர்தானே”

பக்தவச்சலம் காவல்துறைக்கு உத்தரவு போட்டார்.“இந்தப் பைத்தியத்தைக் கைது செய்யுங்கள்”.

ஒரு மாத காலத்திற்குப் பின்-25.1.1964ஆம் நாள் அந்த இளைஞன், திருச்சி தொடர்வண்டி நிலையத்தின் வாசலில் விடியற்காலை 4.30 மணிக்குப் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டு, ‘தமிழ் வாழ்க, இந்தி ஒழிக’ என்று கத்தியவாறு கருகிப் போனான். தமிழக முதல்வர் பக்தவச்சலத்தால் ‘பைத்தியம்’ என்று அழைக்கப்பட்ட அந்த வீர இளைஞன் தான் கீழப்பளூவூர் சின்னச்சாமி. இறக்கும் போது அவன் வயது 27.

சின்னச்சாமி. அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. திருமணமாகி 23 ஆண்டுகள் கழித்து பிறந்த மகன். திருச்சி மாவட்டம் அரியலூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமம் கீழப்பளூவூர்.ஆறுமுகம் தங்கத்தம்மாள் சின்னச்சாமியின் பெற்றோர்.ஐந்தாம் வகுப்பு வரை படித்து விட்டு விவசாயம் பார்த்து வந்த சின்னச்சாமியின் ஓய்வு நேரம் என்பது நம் நாடு, திராவிட நாடு, முரசொலி போன்ற ஏடுகளை படிப்பது தான். திராவிடச்செல்வி- தன் ஒரே மகளுக்குச் சின்னச்சாமி வைத்த பெயர். தன் மகளை, மனைவியை, தந்தையின் மரணத்திற்குப் பிறகு தன்னையே நம்பியிருந்த தாயை, வாழ வைக்க வேண்டிய கடமையை விட தாய்மொழிக்காகப் போராடும் வெறிதான், சின்னச்சாமியை ஆட்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தான், ‘தென் வியட்நாமில் புத்த பிக்குகள் அமைதி வேண்டி தீக்குளித்தார்கள்’ என்ற செய்தி ஏடுகளில் வெளிவந்தது. முதல்வர் பக்தவச்சலத்தால் கைது செய்யப்பட்டு, விடுதலையான சின்னச்சாமி அன்று முதல் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தான். 24.1.1964 வெள்ளிக்கிழமையன்று பள்ளிப் பிள்ளைகளுக்கு இனிப்பு வழங்கி ‘தமிழ் வாழப் பாடுபடுங்கள்’ என்று உணர்ச்சி பொங்கக் கூறிக் கொண்டிருந்தான். “வயலுக்குப் போய் வேலை பார்க்கக் கூடாதா? என்று கேட்டார்கள் அவரது தாயாரும், மனைவி கமலமும்.”வேலைக்குத்தான் போகிறேன். திராவிடச் செல்வியைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்”என்று கூறிவிட்டு, திருச்சி வந்தான்.ஒளிப்படம் எடுத்துக் கொண்டு அதனைப் பெற்றுக் கொள்வதற்கான பற்றுச் சீட்டை நண்பருக்கு அனுப்பி வைத்தான்.

நண்பர் நாகராசனுக்கும் குடும்பத்தினருக்கும் இரண்டு கடிதங்கள் எழுதினான். அது பின்வருமாறு:

“தமிழ் வாழ வேண்டும் என்று நான் சாகின்றேன். இதை நான் திருச்சியிலிருந்து எழுதுகிறேன். என்னை மன்னித்து வாழ்த்தி வழியனுப்பி வையுங்கள். தமிழ் வாழ வேண்டும் என நான் செய்த காரியம் வெல்லும்”-சாகப்போகும் சின்னச்சாமி.

கடிதங்களை பெட்டியில் போட்டு விட்டு திருச்சி தொடர் வண்டி நிலையம் நோக்கி நடந்தான். 25.1.1964 அதிகாலை 4.30 மணிக்கு ஒளிப்பிழம்பாய் எரிந்து போனான் சின்னச்சாமி. ஆதிக்க இந்தி எதிர்ப்புப் போரில் தீக்குளித்து உயிர் மாண்ட முதல் தமிழரும் இவரே! இவர் மறைந்த நாளினையே மொழிப்போர் ஈகியர் நாளாக அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறப்பட்டு வருகிறது.

வாழ்க தமிழ் !
வளர்க தமிழனம் !!😥

error: Content is protected !!