குருதி ஆட்டம் – விமர்சனம்!

குருதி ஆட்டம் – விமர்சனம்!

குருதி ஆட்டம் படத்தில் நாம் இதுநாள் வரை பார்த்த பல திரைப்படங்களில் இருக்கும் பல கிளைக்கதைகள் இருக்கிறது. கூடவே படம் ஒரு கோர்வையாக இல்லாமல், தனிதனியாக இருக்கிறது. ஒன்று ஆரம்பித்து போய் கொண்டிருக்கும் போதே, அதை பாதியில் விட்டுவிட்டு வேறு இடத்திற்கு போவது போல் இருக்கிறது. முழுதாய் கோர்க்கபடாத ஒரு படமாக இருக்கிறது.கபடி, காதல், ஆக்‌ஷன், பழிவாங்கல் என மாஸ் கமர்சியலுக்கான கண்டெண்ட் இருந்தும், படம் மனதில் நிற்கவில்லை. படத்திற்கு ஏற்ற தலைப்பு என்பதால், இறுதிக் காட்சி வரை ரத்தத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

அதாவது மதுரையில் மிகப்பெரிய தாதா ராதிகா. அண்ணன் ராதா ரவி, மகன் கண்ணாரவி , அண்ணன் மகன் பிரகாஷ் ராகவன் என பெரிய பட்டாளத்துடன் வாழ்ந்து வருகிறார். இன்னொரு பக்கம் பெற்றோரை இழந்து, அக்கா மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கிறார் நாயகன் அதர்வா. வழக்கம் போல் டீச்சரான பிரியா பவானி சங்கரை காதலிக்கிறார். இடையில் சிறுமி ஒருவரைக் காப்பாற்றத் துடிப்பவருக்கு சில பல சதிகள்/எதிரிகள். இன்னொரு பக்கம் கொலைமுயற்சியில் நூலிழையில் உயிர் பிழைக்கிறார் ராதிகா. இவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டது யார்? சிறுமியின் உயிரை அதர்வா காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை. சிம்பிளாக சொல்வதானால் கபடி ஆட்டத்தில் தொடங்கும் சிலரின் வாழ்கை எப்படி குருதி ஆட்டத்தில் போய் முடிகிறது என்பதே கதை.

ஆனாலும் ஒரு பக்காவான ஆக்‌ஷன் திரைப்படத்திற்கான ஒன்லைன் கதையை வைத்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகணேஷ். அது மட்டுமில்லாமல் அவர் கதையை டீல் செய்யும் விதம் அபாரம், ஒரே நோக்கில் கதையை பயணிக்கவிடாமல், பல கோணங்களுக்கு கதையை எடுத்து செல்லும் வித்தை அவரிடம் இருக்கிறது. இது தனித்துவமான ஒரு வித்தை, ஒரு நாவலை போன்று திரைப்படத்தை கையாளும் யுக்தி இது. ராதிகாவின் ஒப்பனிங் காட்சி, பல கேங்க்கள், கபடி ஆட்டம் என திரைக்கதையின் ஆரம்பம் பரபரவென தொடங்குகிறது. ஒரு ராவான கேங்ஸ்டர் படத்திற்கான அத்தனை அம்ஷங்களும் அழகாய் பொருந்திய ஒரு திரைப்படமாக வரவேண்டிய அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கிறது.

ஆனால் இதுவெல்லாம் இருந்து என்ன புரோயோஜனம் என ஆகிவிடுகிறது மற்ற காட்சிகள், வெறும் ஆக்‌ஷன் காட்சிகளை மட்டுமே நம்பி படம் எடுக்கப்பட்டிருக்கிறது. எமோசன் சுத்தமாக கனெக்ட் ஆகவில்லை. திரைக்குள் இருக்கும் கதாபாத்திரங்கள் மேல் நாம் ஒன்றி போகவில்லை. அவர்களுக்கு நடக்கும் பாதிப்புகள் நம்மை தாக்கவில்லை. அதற்குண்டான காட்சிகள் இல்லை.

பாடல்கள் அப்படி ஒன்றும் பெரிதாய் சோபிக்கவில்லை. ஆனால் பின்னனி இசை சில இடங்களில் ஆச்சர்யம் தரும் ஒன்றாக இருக்கிறது. யுவனின் வேலையும் பாதியில் நிற்கிறது. கண்ணா ரவி, வட்சன், பிரகாஷ் என பல துணை கதாபாத்திரங்கள் நடிப்பு கவனத்தில் கொள்ளும் படி இருக்கிறது.

மொத்தத்தில் சிறப்பான ஒன்றாய் வரவேண்டிய திரைப்படம், பாதி இடங்களில் பாதி வெந்தும், பாதி இடங்களில் அதிகமாய் வெந்தும் சாப்பிட முடியாமல் ரத்த வாடையுடன் இருக்கிறது.

மார்க் 2.5/5

error: Content is protected !!