“இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வாபஸ்.. மகிழ்ச்சி!” – கர்நாடகா முதல்வர் குமாரசாமி!
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க பாஜக சதி செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு ஆட்சியை கலைக்க எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்படுவதாக தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில், கர்நாடக மாநில முதல் மந்திரி குமாரசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாகேஷ் மற்றும் சங்கர் ஆகிய இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் இன்று திரும்பப் பெற்றனர்.
அது குறித்து அவர்கள் இருவரும் ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் குமாரசாமி அரசுக்கு அளித்து வரும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 117 ஆக குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 உறுப்பினர்களில் பெரும்பான்மை பெற 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே, சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் விலகியதால் குமாரசாமி அரசுக்கு எந்த பாதிப்புமில்லையாக்கும்.
எனவே இது குறித்து குமாரசாமி, “இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டதால் என்ன ஆகப் போகிறது? எங்கள் பெரும்பான்மையில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை. நான் மிகவும் ரிலாக்ஸ் ஆக இருக்கிறேன். எங்கள் பலம் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஒரு வாரமாக மீடியாக்களில் வந்து கொண்டிருக்கும் செய்திகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன். வேறு என்ன செய்வது?” என்று கேட்டிருக்கிறார்.
அட்சினல் ரிப்போர்ட்:
கர்நாடகாவில் கடந்த ஆண்டு (2018) மே மாதம் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடை பெற்றது. 224 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 113 எம்.எல்.ஏ.க் களின் ஆதரவு தேவை. ஆனால், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், பாஜக 104 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கவர்னர் ஆதரவுடன் முயன்றது. ஆனால், சுப்ரீம் கோர்ட் கொடுத்த கெடுபிடி தீர்ப்பு காரணமாக, எடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் சட்ட மன்றத்தை விட்டு வெளியேறினார்.
அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஜேடிஎஸ் ஆட்சி அமைத்தது. தற்போது ஆட்சி நடத்தி வரும் காங்கிரஸ், ஜே.டி.எஸ் எம்எல்ஏக்களுடன் ஒருசில சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் கூட்டணியில் 117 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனால் காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக அவ்வப்போது காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆசை வார்த்தை கூறி, தங்கள் பக்கம் திருப்ப முயற்சித்து வருகிறது.
தற்போது 104எம்எல்ஏக்கள் கொண்ட பாஜகவுக்கு மேலும் 10 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால், ஆட்சியை அசைத்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் முதல் கட்டமாக 2 சுயேச்சை எம்எல்ஏக் களை வளைத்து பிடித்துள்ளது என்று செய்தி பரவுகிறது