முல்லை பெரியாறு அணை: கேரள கவர்னர் அறிவிப்பால் கிளம்பிய பதட்டம்!

முல்லை பெரியாறு அணை: கேரள கவர்னர் அறிவிப்பால் கிளம்பிய பதட்டம்!

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை பலமுறை கேரளா அரசு மீறிய நிலையில், இன்று சட்டசபையில் கவர்னர் உரையில் அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் புதிய அணை கட்டுவோம் என்று கூறியுள்ளார்.

கேரள மாநில சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கவர்னர் ஆரிப் முகமது கான் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா தொற்று பரவலின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆதரவாக நின்றது. தொற்று நோயை அரசு மிகச் சிறப்பாகக் கையாண்டது. மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. அரசின் 100 நாள் செயல் திட்டம் வெற்றி பெற்றுள்ளது.

முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைக்க வேண்டும். இது பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியமானது. மேலும், புதிய அணையைப் பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நிலையான வளர்ச்சி குறிகாட்டிகளில் கேரளா முன்னணியில் உள்ளது. நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான மாநிலம் கேரளா. நிதி ஆயோக்கின் வளர்ச்சிக் குறியீட்டில் மாநிலத்தில் சுகாதாரத் துறை முதலிடத்தில் உள்ளது. அனைவருக்கும் வீடு, நிலம் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் என கூறினார்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை பலமுறை கேரள மாநில அரசு மீறிய நிலையில், தற்போது கவர்னர் உரையில் புதிய அணை கட்டப்படும் என்பது இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள சட்டமன்றத்தில் இன்று கேரள மாநிலத்தின் ஆளுநர் அவர்கள் ஆற்றிய உரையில் கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் மூலம் அறியப்பட்டது. இது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணானது மேலும் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை அவமதிப்பது ஆகும்.

உச்சநீதிமன்றத்தின் ஆணையில் முல்லைப் பெரியாறு அணை எல்லாவிதத்திலும் உறுதியாக உள்ளதாக அறுதியிட்டு கூறப்பட்டுள்ளது புதிய அணை தேவையில்லை மேலும் புதிய அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசிடம் கேரள அரசு திணிக்க முடியாது என்றும் தெளிவாகக் கூறியுள்ளது.

error: Content is protected !!