உடுமலை சங்கர் கொலை வழக்கு: மேல்முறையீடு நிச்சயம்- கவுசல்யா தகவல் -வீடியோ

உடுமலை சங்கர் கொலை வழக்கு: மேல்முறையீடு நிச்சயம்- கவுசல்யா தகவல் -வீடியோ

தமிழகத்தை திடுக்கிடச் செய்த உடுமலை சங்கர் ஆணவக் கொலை செய்யப்பட்ட விவகாரத் தின் மேல் முறையீட்டு வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. முக்கியக் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து இந்த தீர்ப்பு பல தரப்பிலும் அதிர்ச்சி அளிக்கிறது..அப்பா சின்னசாமி & தாய்க்கு தண்டனைக் கிடைக்கும்வரை எனது சட்டபோராட்டம் தொடரும் என கவுசல்யா தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கர். அவரது மனைவி கவுசல்யா மீது கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் சங்கர் பலியானார். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, பழநி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்ற கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல், ஜெகதீசன் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கிலிருந்து கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, அவரது உறவினர் பாண்டித்துரை, கல்லூரி மாணவன் பிரசன்னகுமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது. ஐகோர்ட் அளித்த தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும், 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலை உறுதி செய்யப்பட்டது. வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க கோரி போலீசார் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கவுசல்யா, ’இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை சின்னசாமியை உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வேன். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் எனது தரப்பையும் வழக்கில் இணைத்துக்கொள்வேன். கொலைக்கு தொடர்புடையவர்களுக்கு தண்டனை கிடைத்தால் தான் சங்கருக்கான நீதி கிடைக்கும். தாய் அன்னலட்சுமிக்கு தண்டனை கிடைக்க போராடுவேன் எனது சட்டப் போராட்டம் தொடரும்’ என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!