கருணாநிதி உடல் நலம்: வெங்கய்ய நாயுடு நேரில் விசாரித்தார்!
கடந்த வெள்ளிக்கிழமை நளிரவில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி யின் உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார் ஜனாதிபதி வெங்கையா நாயுடு. இதையொட்டி கருணாநிதியை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நேரில் பார்க்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெங்கையா நாயுடுவுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் காவேரி மருத்துவமனை டாக்டர்கள் குழு சனிக்கிழமை இரவு 8 மணியளவில் 2வது அறிக்கையை வெளியிட்டது. தொடர் மருத்துவ சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலை சீராக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவருக்குத் தேவையான கண்காணிப்பையும், சிகிச்சையையும் மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து அளித்து வருகிறது. கருணாநிதி மேலும் இரண்டு நாள்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவார் என்று திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க ஞாயிற்றுக்கிழமை பகல் 1:00 மணியளவில் காவேரி மருத்துவமனை வந்தார். அங்கு ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர் ஜெயகுமார், ஆகியோரும் உடனிருந்தனர். பின்னர், கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நேரில் சென்று அவரைப் பார்த்தார்.
இச் செய்தியை வெங்கய்யா நாயுடு தனது ட்விட்டரில் பதிவிட்டு “காவேரி மருத்துவமனைக்கு வந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் பார்த்தேன், அவரது குடும்பத்தினரையும் மருத்துவர்களையும் சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தேன். அவர் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர், அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.