சபரிமலை ஐயப்பனை தரிசனம் பண்ணி வந்த கனக துர்க்கா உமன்ஸ் கேர்-ரில் அடைக்கலம்!
சர்ச்சை ஸ்தலமாகி விட்ட சபரிமலையில் தரிசனம் செய்த பெண் கனக துர்காவை அவரது கணவர் வீட்டில் அனுமதிக்காததால் நள்ளிரவு வரை காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு தற்போது பெண்கள் பாதுகாப்பு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்திலுள்ள சபரிமலையில் இளம் பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்ததால் 20க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் தரிசனம் செய்ய முயன்றனர். பக்தர்களின் எதிர்ப்பால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஆனால் கனகதுர்கா, பிந்து ஆகிய இரு பெண்களை போலீசார் ரகசியமாக அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தனர். அதன்பின் கேரளாவில் பெரும் கலவரம் வெடித்தது.
அதோடு பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்களுக்கும் தனிப்பட்ட எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து பாதுகாப்பு கருதி இருவரையும் போலீசார் பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பிந்துவை ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பாக அவரது வீட்டுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கனக துர்காவுக்கு அவரது வீட்டிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. கனக துர்காவை, அவரது மாமியார் கடுமையாகத் தாக்கினார். இதையடுத்து, கனகதுர்கா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கனகதுர்காவை வீட்டில் சேர்க்க அவரது கணவர் மறுத்துவிட்டார்.
கனக துர்காவின் சகோதரரும், அவரை வீட்டில் சேர்க்க முடியாது என்று மறுத்துவிட்டார். எனவே , கனகதுர்கா காவல்நிலையத்தில் சென்று முறையிட்டார். அங்கு நள்ளிரவு வரை இருந்தவரை பெரிந்தலம்மன்னா பகுதியிலுள்ள அரசு பாதுகாப்பு மையத்தில் கனகதுர்கா அழைத்து போய் அங்கு தங்க வைத்தனர்.
ஐயப்பன் சுவாமி மற்றும் இந்து அமைப்புகளிடம் மன்னிப்பு கேட்டால்தான் வீட்டில் சேர்த்து கொள்ளோம் என்று கனகதுர்காவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சபரிமலை கோயிலுக்குச் சென்ற கனகதுர்கா மற்றும் பிந்துவுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.