மீ டூ விவகாரத்தில் சின்மயியால் பாதிக்கப்பட்ட கல்யாண் மாஸ்டர்!
உலக அளவில் ட்ரெண்டாகி இருக்கும் #Metoo ஹேஷ்டேக் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி சவால் விட்டு பரபரப்பு கிளப்பிக் கொண்டே மேலும் பல பிரபலங்கள் மீதும் பாலியல் புகார்களை பகிர்ந்து சலசலப்பை அதிகப்படுத்தி வருகிறார். குறிப்பாக பல வருடங்களுக்கு முன் வைரமுத்துவால் நான் பாதிக்கப்பட்டேன், அது நிஜம் ..என்னைப் போல மேலும் பல பாடகிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உரக்க கூறும் சின்மயி, சமூக வலைதளங்களில், யார் யாரோ, பதிவிடும் பதிவுகளை, அது உண்மையா? அந்த நபர் யார்? என்பதை எல்லாம் கொஞ்சம் கூட ஆராயாமல், ரீ ட்வீட் செய்வதோடு, அந்த பதிவுகளை தனது சமூக வலைதளப் பக்கத்திலும் வெளியிடுகிறார். இப்படியான சின்மயியின் இத்தகைய செயலால், எந்த தவறும் செய்யாத பிரபல நடன இயக்குநர் கல்யாண் பெயரும் சின்னாபின்ன மானதில் நொந்து போய் விட்டார்.அதாவது இலங்கை பெண் ஒருவர் கல்யாண் மாஸ்டர் மீது பாலியல் புகார் தெரிவித்து ட்விட்டரில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். இந்த பதிவை சின்மயி வழக்கம் போல் ரீட்வீட் செய்ததால், இது வைரலாக பரவியது.
இதனால் கல்யாண் மாஸ்டரின் குடும்பத்தில் குழப்பமும் பிரச்சினைகள் ஏற்பட, திடீரென்று இந்த கல்யாண் மாஸ்டர் மீதான பதிவு பொய்யானது என்ற தகவல் தெரிய வந்த நிலையில், இந்த விவகாரத்தில் சின்மயி பின்வாங்கினார். ஆம்.. நடன இயக்குநர் கல்யாண் மீது புகார் தெரிவித்த நபர், “சின்மயியின் ட்வீட்டுகளால் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்க்காக, காரணமே இல்லாமல் கல்யாண் மாஸ்டர் மீது புகார் தெரிவித்தது நான்தான். உங்களின் பெயரை பயன் படுத்தியதற்காக சாரி” என்று கேஷூவலாக ட்வீட் செய்திருக்கிறார். இதை கல்யாணும் ரீட்வீட் செய்திருக்கிறார். அஹ்துடன் “விளையாட்டுக்கு புகார் சொல்வதற்கு நான்தானா கிடைத்தேன்” என்று அந்த இலங்கை வாசியிடம் கேள்வி எழுப்பிய கல்யாண், இது தொடர்பான பதிவுகளை தயவு செய்து மீடியாக்களுக்கு அனுப்புமாறும் கேட்டு கொண்டுள்ளார்.
அதற்கு, ‘தனக்கு வரும் பதிவுகளை எந்த யோசனையும் இல்லாமல், அப்படியே அதை சின்மயி ரீ போஸ்ட் செய்கிறார். அதனால் அவரின் ஆதாரமற்ற பதிவுகளை நம்ப வேண்டாம். ஆண்களை அசிங்கப்படுத்த பெண்ணியவாதிகள், இந்த மீ டூ டிரெண்டை பயன்படுத்துகிறார்கள்’என்று கல்யாண் மீது புகார் தெரிவித்தவர் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே இந்த விஷயத்தில், கல்யாண் மீது பரவும் புகார் பொய்யானது, என்பதை ஒப்புக் கொண்ட சின்மயி, “இப்படி ஒருவர் மீது பொய்யான தகவல் பரவுவதை ஏற்க முடியாது” என்று டிவீட் போட்டதை பார்த்த அந்த நபர், ”நீங்கள் தான் அவர் பற்றி வந்த ட்வீட்டை சோஷியல் மீடியா வில் போஸ்ட் செய்தது. உங்களின் புகார்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளது. நீங்கள் தான் அதற்கு பொறுப்பு. என் கடமை என்பதால் உண்மையை சொன்னேன். அப்பாவிகள் தண்டிக்கப் படக் கூடாது.” என்று பதிவிட்டுள்ளார். ஆக எதையும் முறைப்படி ஆராயாமல் சின்மயி பகிரும் இதுபோன்ற தவறான பதிவுகளால் நடன இயக்குநர் கல்யாண் பாதிக்கப்பட்டது போல, எத்தனை பேர் பாதிக்கப்பட போகிறார்களோ என்று கோலிவுட்டையும் தாண்டி முணுமுணுப்பு கேட்கிறது.