ஜெ. பெயரில் சிறப்பு கலைமாமணி விருது! -முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

ஜெ. பெயரில் சிறப்பு கலைமாமணி விருது! -முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் சிறப்பு விருதுகளாக இனி ஆண்டுதோறும் வழங்கப்படும். இவையும் தலா 5 சவரன் எடையுள்ள பொற் பதக்கங்களாக வழங்கப்படும். நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூபாய் 2 ஆயிரத்திலிருந்து மாதந்தோறும் ரூபாய் 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை வழங்கி பேசினார்.

அப்போது முதல்வர் பழனிசாமி  பேசியதாவது,

தமிழ்நாட்டை ஆண்ட முதல்வர்களில் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஆகியோர் கலைஞர்களின் நலன் காத்தவர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பொதுமக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் எப்போதும் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் பல்வேறு நலத் திட்டங்களையும், விருதுகளையும் அறிவித்து அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. கலையும், பண்பாடும் ஒன்றோடு ஒன்றாக பிணைந்தவை. தமிழ்நாட்டின் மரபுக் கலைகளின் வழியாக பண்பாட்டினை பாதுகாத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவும், இசைக்கலை, நாடகக்கலை, நாட்டியக் கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை ஆகியவைகளை இளைய தலைமுறையினருக்கு இசை மற்றும் கவின்கலைக் கல்வி பயிலகங்கள் வாயிலாக கொண்டு செல்லவும், இக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு கலைத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும் கலை பண்பாட்டுத் துறை என்ற ஒரு தனித்துறை டிசம்பர் மாதம் 1991-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கப்பட்டுள்ளது.

இத்துறையின் கீழ் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் என்ற அமைப்பு நமது மாநிலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு போதுமான நிதியுதவி வழங்கி, தொன்மையான கலைகளை வளர்த்தல், அக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலை வடிவங்களை ஆவணமாக்கி அவற்றை மீட்டெடுத்தல், நாடகம், நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், தமிழக பாரம்பரிய கலைகளை வெளி மாநிலங்களிலும், உலகளவிலும் எடுத்துச் செல்லுதல் போன்ற பணிகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த சீர்மிகு விழாவில் இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், சின்னத்திரை, கிராமியக் கலை மற்றும் இதர கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதில் 72 வகையிலான கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப் படவுள்ளது. மேலும், 8 மூத்த கலைஞர்களுக்கு அவர்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, தலா 25 ஆயிரம் ரூபாய் பொற்கிழி, கலை வளர்ச்சிக்கு பாடுபட்ட மூன்று தன்னார்வ நிறுவனங் களுக்கு கேடயம், சிறந்த முறையில் செயல்பட்டு வரும் ஒரு நாடகக் குழுவிற்கு சுழற்கேடயம், புகழ் பெற்ற இயல், இசை, நாட்டியக் கலைஞர்களுக்கு முறையே பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரஸ்வதி ஆகியோர் பெயரில் ஒன்பது கலைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், பட்டயமும் இந்த விழாவில் வழங்கப்படவுள்ளது. முதிய கலைஞர்களுக்கு அவர்கள் செய்த சேவைக்காகவும், வளர்ந்து வரும் இளைய இளைஞர்கள், ஊக்கமுடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவும் இங்கே விருதுகள் வழங்கப்படவுள்ளது.

நம் நாட்டு விடுதலைக்காக நடைபெற்ற போராட்டங்களும், நமது மொழி காக்க நடைபெற்ற போராட்டங்களும் வெற்றியடைந்ததில் கலைஞர்களின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. நாட்டு மக்களிடையே மொழி உணர்வு, சுதந்திர உணர்வு ஏற்படுவதற்கு பல்வேறு இசைக் கருவிகளுடன் கலைஞர்கள் வீதிதோறும் பாடிய பாடல்களும், நாடக மேடைகளில் பேசிய வசனங்களும் அடிப்படையாக அமைந்தன. கலைஞர்கள், நாம் நாட்டுக்காக வாழ்கிறோம் என்பதையும், நமது கலை, நாட்டு மக்களுக்காக, மக்களை மகிழ்விப்பதற்காகத் தான் என்பதையும் உணர்ந்து, கலைக்கு உயரிய சேவையையும் பங்களிப்பையும் அளிக்க வேண்டும். கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்ற ஆன்றோர் மொழிக்கேற்ப, கலைத் துறையில் உலகளவில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கலைஞர்கள், தான் கற்ற கலையின் ஆரம்ப நிலையிலேயே நிற்காமல், மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தங்கள் திறமைகளை அடிக்கடி புதுப்பித்துக் கொண்டே, தான் பயின்ற கலையில் நிபுணத்துவம் பெற வேண்டும். அவ்வாறு பெற்ற நிபுணத்துவத்தை தங்கள் கலைகளில் முறையாகக் கையாண்டு தாங்கள் சார்ந்த கலைக்கு மெருகேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கலைமாமணி பட்டம்’ பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டு களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் உங்கள் திறமைகளை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு நீங்கள் ஏற்றுக் கொண்ட கலைக்கு சிறந்த தொண்டாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே, இங்கே இருக்கின்ற கலைஞர் பெரு மக்கள் சில கோரிக்கைகளை வைத்திருக்கின்றார்கள். இங்கே கலைமாமணி விருது வழங்குகின்ற பொழுது இந்தக் கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றித் தர வேண்டுமென்று அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். அந்தக் கலைஞர் பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று அரசால் கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட விரும்புகின்றேன். கலைமாமணி விருது 3 சவரனுக்கு பதிலாக இனி 5 சவரன், அதாவது 40 கிராம் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலித பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் சிறப்பு விருதுகளாக இனி வழங்கப்படும். இவையும் தலா 5 சவரன் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும். நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூபாய் 2 ஆயிரத்திலிருந்து மாதந்தோறும் ரூபாய் 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

error: Content is protected !!