விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலை :முதல்வர் திறந்துவைத்தார். – வீடியோ

விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளை சிலை :முதல்வர் திறந்துவைத்தார். – வீடியோ

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற் கொண்டு வரும் முதலமைச்சர் பழனிசாமி, தாயாரின் மறைவினால் அதனை தொடர முடிய வில்லை. இந்த நிலையில், தற்போது மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள அவர், விராலிமலையில் சீறிச்செல்லும் ஜல்லிக்கட்டு காளையை ஒரு வீரர் அடக்குவது போன்ற வெண்கல சிலையை திறந்து வைத்தார். கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிக்கட்டை பெருமிதப்படுத்தும் விதமாக இந்த சிலை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பொதுமக்களின் 100 ஆண்டு கால கனவு திட்டமாக, காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 1,088 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய குளமான கவிநாடு கண்மாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அப்போது, இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் பழனிசாமியை வரவேற்பதற்காக சுமார் 500 மாட்டு வண்டிகளுடன் வந்த விவசாயிகள், பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். மேலும், பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து, விவசாயிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் விருப்பத்தை ஏற்று மாட்டு வண்டியை ஓட்டினார். இதைப் பார்த்த பொதுமக்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.

இதை அடுத்து கூட்டத்தில் பேசிய முதல்வர், “வீரமிகு விராலிமலை மண்ணில் பிறந்த அனைவருக்கும் உள்ள வீரத்தை பறைசாற்றுகிற விதமாக, விராலிமலை முருகன் திருக்கோவிலுக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள, வீரமிகு இளைஞர் காளையை அடக்குகின்ற சிலையை, தத்ரூபமான காட்சியை உங்கள் மனதிலே நிற்கின்ற அளவிற்கு அமைத்திருக்கின்றார்கள்.

புதுக்கோட்டை மண் வீரம் நிறைந்த மண். தமிழகத்திலேயே அதிகமாக ஜல்லிக்கட்டு நடைபெறுகின்ற மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் என அமைச்சர் தெரிவித்தார். கடந்த ஆண்டு 110 இடங்களில் ஜல்லிக்கட்டு இந்த மாவட்டத்தில் நடந்துள்ளது. ஆகவே, இந்த மண்ணில் பிறந்த இளைஞர்கள் வலிமை மிக்க காளைகளை அடக்கக்கூடிய வீரமிக்க இளைஞர்கள், அவர்களை பாராட்டுகின்றேன்.

விவசாயிகள் அதிகமாக வசிக்கின்ற இந்தப்பகுதி மக்களுக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்குகின்ற விதமாக காவேரி-குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும். இது மக்கள் மற்றும் விவசாயிகளின் கனவுத் திட்டம். நீண்ட காலமாக வானம் பார்த்த பூமியாக இருக்கின்ற புதுக்கோட்டை மாவட்டத்தை வளம்மிக்க பூமியாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காவேரி-குண்டாறு திட்டத்திற்கு கால்வாய் அமைப்பதற்கான நில ஆர்ஜிதப் பணி முடிந்தவுடன் இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு நானே நேரடியாக வருவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

https://twitter.com/aanthaireporter/status/1319189578226429954

இந்தப் பூமி பசுமையான பூமியாக மாறும். வேளாண் பெருமக்கள் கண்ட கனவை தமிழக அரசு நிறைவேற்றித் தரும். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், சீறிச்செல்லும் ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரர் ஒருவர் அடக்குவது போன்ற அற்புதமான சிலையை கலை வடிவுடன் தத்ரூபமாக வடிவமைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், அதனை தத்ரூபமாக வடிவமைத்த சிற்பிக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்

error: Content is protected !!