ஜெய்பீம் – விமர்சனம்!

ஜெய்பீம் – விமர்சனம்!

கூகுளில் இருளர் என்று சர்ச் செய்தாலே அவர்கள் ஏதாவது சான்றிதழ் கோரிய செய்திகள்தான் ஏகப்பட்டவை இருக்கும். அப்படி நம் அரசாங்கத்தால் ஒரு இனக்குழு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டே இருக்கும் வரலாற்றை, அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டே இருப்பதை, அவர்களின் வாழ்வியலோடு நெருங்கி, அச்சு அசலாக இரத்தமும் சதையுமாக ஒரு அற்புதமான படைப்பாக உருவாக்கியதற்கு ஜெய்பீம்-மின் மொத்த குழுவிற்கும் தனி பாராட்டு விழாவே நடத்த வேண்டும். ஒரு சினிமா என்பது சமூகத்தின் பிரச்சனைகள் பேச வேண்டும், அதுவும் உண்மையை உரக்க பேசவேண்டும் என்பதெல்லாம் அப்புறம்தான், முதலில் ஒரு படைப்பு நம் மனதை நெருங்க வேண்டும். கூடவே நம் உணர்வுகளை பாதிக்க வேண்டும். அது தான் ஒரு சிறந்த படைப்பாக மாற முடியும். அந்த வகையில் தமிழகத்தின் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் மிக அழகாக ஒரு கதையை கோர்த்து, அதற்கு சிறப்பான திரைக்கதையை எழுதி, அதை திரையில் எந்த வித தங்குதடையுமில்லாமல், ரத்தமும் சதையுமான உணர்வுபூர்வமான படைப்பாக மாற்றியதில் மொத்த படக்குழுவும் வென்றிருக்கிறது.

கதை என்னவென்று கேட்டால் ஒரு இருளர் குடும்பத்தைச் சேர்ந்த பெண் தன் கணவரை காணாமல் தேடித் தவிக்கும் புள்ளியாகத் தொடங்கி ,மலைவாழ் மக்களின் அறியாத்தன்மையுடன் நகரும் வாழ்வியலில் படர்ந்து, அதிகாரவர்க்கத்தின் அராஜ போக்கையும், அரசியல் சட்டத்தின் அமைப்பு பற்றிய கேள்வியை எழுப்பியப்படி அடுத்தடுத்து விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே போவதுதான் ஜெய்பீம்

நாயகன் சூர்யா-வுக்கு இப்படத்தில் டூயட் இல்லை, ஓபனிங் சாங் கிடையாது சண்டை இல்லை, பஞ்ச் டயலாக் கிடையாது, ஆனால் படம் முழுவதும் சந்துருவாகவே பரிமளித்து பிரமிக்க வைக்கிறார். ஒரு நட்சத்திர. நடிகர் எளிதில் ஏற்காத பாத்திரத்தை ஏற்று, படத்தின் பாணியை பலத்தை பன்மடங்கு கூட்டியுள்ளார். மணிகண்டன் கள்ளர் இன இளைஞனாக அசத்தியிருக்கிறார். எங்குமே அவரின் வேறு முகம் தெரியவில்லை. லியோ மோல் சிவப்பு மஞ்சள் நாயகியாக இவர் என ஆச்சர்யப்பட வைக்கிறார். கள்ளர் இனப்பெண்ணாக மொழி முதற்கொண்டு அவர்களின் உடல் நளினத்தை நடிப்பில் கொண்டுவந்து, கணவனை பிரிந்து ஏங்கும் பிள்ளைதாச்சி பெண்ணாக மனதை கலங்கடித்துவிட்டார்.

கெட்டவர்கள் எவ்வளவு சிறப்பாக நடிக்கிறார்களோ அதைப் பொறுத்துதான் அடிபடும் எளியவர்களின் வலி நமக்கு புரியும் அந்த வகையில் போலீஸாக வரும் அனைவருமே மிக தத்ரூபமாக நடித்து அசத்தியுள்ளார்கள். அதிலும் அந்த இன்ஸ்பெக்டராக வருபவரின் உடல்மொழியும் பார்வையும் அசரடிக்கிறது. போலீஸின் தந்திரங்களை கைக்கொள்ளும் நடிப்பு அபாரம். பிரகாஷ்ராஜ் சின்ன பாத்திரம் என்றாலும் பச்சக்கென மனதில் ஒட்டுகிறார்.

ஒவ்வொரு பிரேமிலும் இருளர் குடியிருப்பு, அவர்கள் வாழ்வியல் அவர்களின் அப்பாவித்தனம், அத்தனையும் அத்தனை துல்லியமாக நுண்ணிய விவரங்களோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எலி பிடிக்கும் அந்த முதல் காட்சியே இது வேறுமாதிரியான படம் என்பதை முகத்தில் அடித்து சொல்லி விடுகிறது. பாம்பு பிடிக்கும் காட்சி, அவர்கள் விலங்குகளை வேட்டையாடும் காட்சிகள் என அத்தனையும் தமிழ் சினிமாவுக்கு புதுசு. இதையொட்டி கள்ளர் குடியிருப்பிலேயே சென்று படமாக்கியுள்ளதும், அவர்களையே படத்தில் நடிக்க வைத்திருப்பதும் சிறப்பு.

ஒளிப்பதிவு கண்களை கொள்ளை கொள்கிறது 1994 ஆம் ஆண்டு என்பதை அழகாக திரையில்கொண்டுவந்ததில், எஸ் ஆர் கதிர் ஜெயித்திருக்கிறார். இருளர் குடியிருப்பு காட்சிகள், ஹைகோர்ட் காட்சிகளின் பரபரப்பை கேமராவே செய்து அசத்துகிறது. ஷான் ரோல்டனின் இசை படத்திற்குத் தேவையான பங்களிப்பை மிகச் சரியாக் செய்திருக்கிறது. படத்தில் மூன்று பாடல்கள் ஆனால் படம் பார்க்கும் போது அது பாடல்களாக தோன்றாமல் அவர்களின் வாழ்க்கையை பார்ப்பதாகவே படத்துடன் சேர்ந்து பயணித்துள்ளது இசை.

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வரும் நுண்ணிய விவரங்கள் தான், பாம்புபிடிக்கும் போது தலையை தட்டி பிடிப்பது, இருளர்களின் வாழ்வியல், கோர்ட்டுக்கு கணவனை தேடி வரும்மனைவியும், குழந்தையும் ஹைகோர்ட் கட்டத்தை பிரமிப்புடன் திரும்பி திரும்பி அண்ணாந்து பார்ப்பது, போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் சித்தரவதை காட்சி விவரணைகள் என எல்லா காட்சியிலும் அத்தனைதுல்லியம். படத்திற்கு தேவையற்ற காட்சி என ஒன்று கூட படத்தில் இல்லாதது படத்தின் மிகப்பெரும் பலம். தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத ஒரு படைப்பை தந்து வென்றிருக்கிறார் இயக்குநர் த. செ. ஞானவேல். கூட்டத்தில் ஒருவனாக தொடங்கிய ஞானவேல்தான இது? என்று வியக்க வைத்து விடுகிறார்..

ஆனாலும் சூர்யா பாத்திரத்திற்கு பலம் வேண்டுமென்பதற்காகவே ஏகப்பட்ட காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாக தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. மேலும் நீதிபதிகள் சூர்யா சொல்லும் எல்லாவற்றிற்கும் தலையாட்டுதையும், சூர்யா காட்சிக்குக் காட்சி வாதத் திறமையாலசர வைப்பது மட்டுமே இது சினிமா என்பதை நினைவுப் படுத்துகிறது..கூடவே இன்னமும் இருளர் வாழ்க்கைக்கு விடியலே வரவில்லை என்ற நினைப்பும் வருகிறது

ஆனாலும் ஒவ்வொருவரும் பார்த்தே ஆக வேண்டிய பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறது இந்த ஜெய்பீம் என்பதுதான் உண்மை

மார்க் 4./ 5

Related Posts

error: Content is protected !!