சபரிமலைக்கு வர லேடி ரிப்போர்ட்டர்களுக்கு தடை! – கேரள டிஜிபி அதிரடி!
சர்ச்சை பூமியாகி விட்ட சபரிமலையில் ஏகப்பட்ட கெடுபாடுகள் அமலாகி உள்ளது. குறிப்பாக செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களுக்கு தற்காலிகத் தடை விதித்து டிஜிபி லோக்நாத் பெஹெரா உத்தரவிட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது..
சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மை யில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஆகவே அப்பகுதிகளில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ரெஹானா பாத்திமா என்ற பெண் பத்திரிகையாளரும் கவிதா என்ற மற்றொரு பெண்ணும் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை கோயிலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது எதிர்ப்பு வலுக்கவே சன்னிதானம் வரை சென்று மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனிடையே இந்து அமைப்புகளின் போராட்டம் முற்றியதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஐப்பசி மாத பூஜை நிறைவடைந்ததையடுத்து சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை மூடப்பட்டது. இந்நிலையில் மண்டல பூஜைக்காக நாளை மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. இதனால் பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலவுங்கல் ஆகிய பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் நவம்பர் 6-ஆம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே விஸ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து ஐக்யவேதி உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளின் கூட்டு தளமான சபரிமலை கர்மா சமிதி பத்திரிகை நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், சபரிமலை நடைதிறப்பின்போது செய்தி சேகரிக்க பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
நேற்று சபரிமலை செல்லும் வழியான நிலக்கல்லில் ஊடகவியலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து இன்று இலவுங்கல் பகுதியில் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சபரிமலையில் செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களுக்கு தற்காலிகத் தடை விதித்து டிஜிபி லோக்நாத் பெஹெரா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெஹெரா, பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவை முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த முறை பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதன் மூலம் நிறைய விமர்சனங்களை சந்திக்க வேண்டியிருந்தாகவும் குறிப்பிட்டார். நாங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அது பத்திரிகையாளர்களையும் பொதுமக்களையும் பாதுகாக்கவே எனவும் பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தை தடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.