அதிமுக இரண்டும் இணையணும் – (சசிகலா) நடராஜன் கடிதம்

அதிமுக இரண்டும் இணையணும் – (சசிகலா) நடராஜன் கடிதம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து, அரசியலில் மற்றும் தனிப்பட்ட முறையில் எந்தக் கருத்துகளையும் சொல்லாமல் ஒதுங்கியிருந்த ‘புதிய பார்வை’ ஆசிரியர் ம.நடராஜன், அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவுக்கு பிறகு ஒன்று சேர வேண்டியது காலத்தின் கட்டாயம் என்ற தலைப்பில் முதல் முறையாக ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், ” 1987-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று இரண்டாக அ.தி.மு.க. பிளவுபட்ட சம்பவங்களையும், அதன் பிறகு சட்டசபை கலைக்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில், ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்து முடிவடையக்கூடிய சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சி, நாங்கள் அ.தி.மு.க. ஆட்சியுடன் இணைந்து செயல்பட்டால், மந்திரி சபையில் பங்கு வேண்டும், ஜி.கே.மூப்பனார் முதல்-அமைச்சராக வேண்டும் என்ற திட்டத்தோடு அணுகியபோது, அதை ஏற்க அ.தி.மு.க. தலைமை மறுத்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இரட்டை இலை மீட்கப்பட்ட வரலாறு

இந்த நிலையில், ம.நடராஜன், ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்து ஆற்றிய உதவிகளை எல்லாம் விரிவாக தெரிவித்துள்ளார். மீண்டும் 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு, 2-வது இடத்தில் 30 எம்.எல்.ஏ.க்களை பெற்று ஜெயலலிதா அணி வெற்றி பெற்றதையும், 3-வது இடத்தை காங்கிரசும், ஒரு இடத்தில் மட்டும் ஜெயித்து 4-வது இடத்தை ஜானகி அணியும் பிடித்ததை குறிப்பிட்டு, தொடர்ந்து இரு அணிகளும் ஒன்று சேர்ந்து இரட்டை இலை சின்னம் மீண்டும் மீட்கப்பட்ட வரலாற்றையும் விரிவாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில், இரட்டை இலை சின்னத்தின் மீது உரிமைகோரி எஸ்.டி.சோமசுந்தரம், கண்ணப்பன் உள்ளிட்டோரும், மற்றொரு சமயம் திருநாவுக்கரசரும் இந்திய தேர்தல் ஆணையம் வரை சென்று தோல்வியை சந்தித்தார்கள் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு ஒரு நீண்ட நெடிய சம்பவங்களின் தொகுப்பை அந்த அறிக்கையில் பதிவு செய்துள்ள புதியபார்வை ஆசிரியர் ம.நடராஜன் மேலும் கூறியிருப்பதாவது:-

தொண்டர்கள் வருத்தம்

அ.தி.மு.க. வரலாறு தெரியாமல் இன்று ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இரட்டை இலை எங்களுக்கே என்று ஒருசாரர் மனு கொடுக்க, இல்லை.. இல்லை.. எங்களுக்கே என்று ஆளும் அ.தி.மு.க. கட்சியினர் மனு கொடுக்க, இச்செயல் பலகோடி தொண்டர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெயலலிதா தான் பொதுச் செயலாளர், ஜெயலலிதாவே எல்லாம் என்று அடங்கி ஒடுங்கி இருந்தவர்கள் எல்லாம், அவர் மறைவுக்கு பிறகு, தாங்கள் தான் எல்லாம் என்ற எண்ணத்தில் ஒவ்வொருவரும் மற்றவர் மீது சீறிப்பாய்ந்து, சேற்றை வீசுவது பொதுமக்களிடையே முகஞ்சுளிக்க வைக்கிறது.

அ.தி.மு.க. வெற்றிக்கு பங்காற்றினேன்

2 அணிகளும் ஒன்று சேருங்கள் என்று இந்திய பிரதமரே சொல்லும் அளவுக்கு, அ.தி.மு.க.வின் குடும்ப சண்டை அகிலமே தெரிந்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் அருவெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இரட்டை இலை சின்னத்தை மீட்டுக்கொண்டுவர வேண்டும் என்று ஒரு கோடிக்கும் மேலாக உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் நித்தம்.. நித்தம்.. தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், நான் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரிடம் ஏற்பட்ட அபிமானத்தாலும், நெருக்கத்தாலும், அவர்கள் சென்ற அரசியல் பாதையில் நடைபோட்டவன், என்னாலான தொண்டினை செய்தவன் என்ற முறையிலும், 30 ஆண்டு காலத்திற்கு ஜெயலலிதா என்னை ஏற்றுக்கொண்டிருந்தபோதும், ஒதுக்கியபோதும் அ.தி.மு.க.வின் உயர்வுக்கும், வெற்றிக்கும் நான் பங்காற்றி இருக்கிறேன் என்பதை அனைவரும் அறிவார்கள்.

காலத்தின் கட்டாயம்

அவர் விட்டு சென்ற கட்சியை தொடர்ந்து செயல்படுத்துகின்ற பொறுப்பும், முன்னெடுத்துச் செல்கின்ற கடமையும் நமக்கு உள்ளது. இரு அணிகளாகப் பிரிந்து, சகோதரர்கள் என்ற எண்ணத்தை மறந்து, சேற்றை வாரித் தூற்றிக்கொள்வது, கண்டன குரல்களை எழுப்புவது, தொண்டர்கள், பொதுமக்கள் ஏன் தோழமை கட்சியினர் கூட யாரும் விரும்பவில்லை.

‘உங்கள் வீட்டுக்கு வந்தால் நீ என்ன தருவாய்?’ என்று கேட்பதும், ‘நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய்?’ என்ற பாணியில் ஒருங்கிணைப்ப வர்கள் பேசுவதும் முரண்பாடான செயலாக உள்ளது. எனவே, தங்களுக்குள் உள்ள மனவேறுபாட்டை, கர்வத்தை மறந்து நல விரும்பிகள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் விரும்புவது போல் ஒன்று சேர்ந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஆட்சியை மீதமுள்ள 4 ஆண்டுகளுக்கு தொய்வின்றி தொடர பாடுபட வேண்டும். ‘நாளை நமதே, ஆட்சியும் நமதே’ என்ற ஜெயலலிதாவின் வார்த்தைக்கு உயிரோட்டம் தருவது அனைவரின் கடமையாகும்.

‘ஒருவர் பொறை, இருவர் நட்பு’ என்ற முதுமொழிக்கிணங்க ஒருவர் பொறுத்துக்கொள்வதன் மூலம் இருவர் நட்பு நீடிக்கும் என்ற கருத்தை ஏற்று, அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இதை தவறவிட்டால் காலம் நம்மை மன்னிக்காது.

இவ்வாறு ம.நடராஜன் கூறியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!