ரயில்வே பயணிகளின் தரவுகளை தனியாருக்கு விற்பனை!- மோடி அரசு முடிவு!

ரயில்வே பயணிகளின் தரவுகளை தனியாருக்கு விற்பனை!- மோடி அரசு முடிவு!

மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டின் சொத்துக்கள் என்று வர்ணிக்கப்பட்ட அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது. இதற்கு தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், தனியார் முதலாளிகளிடமிருந்து நன்கொடை வாங்கி அவர்களுக்கு நாட்டின் வளங்களை மோடி அரசு விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய ரயில்வேவும் தங்களது பயணிகளின் தரவுகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்காக டெண்டர் விட்டுள்ளது.

பொதுவாக மக்கள் வெளியூர் செல்வதாக இருந்தால் பேருந்து, விமானம், ரயில்வே உள்ளிட்ட பெரிய போக்குவரத்து உபகரணங்களை பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் மக்கள் இரயிலில் செல்ல வேண்டுமென்றால், இரயில்வே நிறுவனத்துக்கு சொந்தமான IRCTC என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து செய்வர். அப்படி அவர்கள் முன்பதிவு செய்யும்போது பயணிகளின் பெயர், வயது, மொபைல் எண், இ-மெயில், முகவரி உள்ளிட்ட தரவுகளை அதில் பதிவு செய்யவேண்டும்.

இந்த IRCTC இணையதளம் மூலம் ரயில்வே-வை தவிர்த்து பேருந்து, விமானம், ஹோட்டல், சுற்றுலா உள்ளிட்டவற்றுக்கான பயணச் சீட்டு, விடுதிகள், உள்ளூர் மற்றம் வெளிநாடு சுற்றுலா தொடர்பாக பேக்கேஜ்கள், உணவு ஆகிவற்றை முன்பதிவு செய்ய முடியும். இப்படி செய்யும்போது பயணிகளின் ஆதார் உள்ளிட்ட தகவல்களையும் அதில் பரிமாறிக்கொள்ள வேண்டும். இவ்வாறு பகிரப்படும் பயணிகளின் தரவுகள் எல்லாம் இந்தியன் ரயில்வே சேகரித்து வைத்துள்ளது.

இந்த நிலையில், பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வே, தங்களது பயணிகளின் தரவுகளை விற்பனை செய்வதற்காக தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் கோரியுள்ளது. இதன் மூலம் இந்திய ரயில்வேவுக்கு சுமார் ரூ.1000 கோடி வரை வருவாயை அதிகரிக்க முடியும் என்ற கணக்கில் தனியாருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

முன்னதாக ஒன்றிய அரசு ‘தேசிய பணமாக்கல்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. அதன்படி அரசு கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி, இரயில்வே, மின் விநியோகம், சுரங்கங்கள், இயற்கை எரிவாயு குழாய், விளையாட்டு மைதானங்கள், ரியல் எஸ்டேட் உள்ளிட்டவைகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் 4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்து இருந்தது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு ‘நாடு விற்கப்படுகிறது’ என்று எதிர்கட்சிகள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தன. இந்த நிலையில், தற்போது இரயில்வே பயணிகள் தரவுகளை தனியாருக்கு விற்பனை செய்து அதன்மூலம் வருவாய் நீட்டவுள்ள ஒன்றிய அரசின் மோசமான திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்கள் தெரிவித்து வருவதோடு, மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Related Posts

error: Content is protected !!