அமெரிக்க ராணுவம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!
ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவ படைதளங்கள் மீது ஈரான் செவ்வாய்க்கிழமை அதி காலை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இது அமெரிக்காவுக்கான பதிலடி என ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானங்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட ராணுவ தளபதி ஜெனரல் குவாசிம் சோலெய்மணி கொல்லப்பட்டார். அவருடன் ஈராக் துணை ராணுவ படை தளபதி உட்பட 8 ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்டனர்.
இதனால் ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஈராக்கும் அமெரிக்காவுக்கு எதிராக திரும்பியுள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க படைவீரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ஈராக் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈராக்கில் சுமார் 5000 அமெரிக்க படைவீரர்கள் உள்ளனர். ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட கூட்டணி படைகளுடன் இவர்கள் ஈராக் படைதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஈராக்கில் உள்ள 2 அமெரிக்க படைதளங்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இது அமெரிக்காவை பழிவாங்க நடத்தப்பட்ட தாக்குதல் என ஈரான் தலைவர் அயட்டோலா அலி காமேனி அறிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை ஈராக் மற்றும் அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 80 அமெரிக்க பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு செய்தி சேனல் தெரிவித்துள்ளது. ஆனால் இதை அமெரிக்க ராணுவம் இதுவரை உறுதி செய்யவில்லை.
மொத்தம் 22 ஏவுகணைகள் அமெரிக்காவின் இரண்டு படைதளங்கள் மீது ஏவப்பட்டன. இந்த தாக்குதலால் ஈராக் படைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நேரப்படி ஜனவரி 7ம் தேதி காலை 5.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கில் அல்- அசாத் மற்றும் இர்பிலில் உள்ள இரண்டு அமெரிக்க படைதளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜோனதன் ஹாஃப்மன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் குறித்த விவரங்களை அதிபர் டிரம்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஹாஃப்மன் கூறினார்.
இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
அனைத்தும் நலமாக உள்ளது. ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க படைதளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிர்பலி மற்றும் சேதங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. நம்மிடம் உலகிலேயே அதிசக்தி வாய்ந்த ராணுவம் உள்ளது. இந்த விவகாரம் குறித்து நாளை காலை அறிக்கை வெளியிடுவேன் என்று அதிபர் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் கண்டனம்
அமெரிக்க படைதளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பிரிட்டன் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் டோமினிக் ராப் ‘‘ ஈராக் ராணுவ தளங்களில் பிரிட்டன் உள்ளிட்ட கூட்டணி படைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதலில் பிரிட்டன் படையினருக்கு பாதிப்பு எதுவும் இல்லை’’ என்று டோமினிக் ராப் தெரிவித்துள்ளார்.