வில்வித்தை உலகக்கோப்பை: இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்!- வீடியோ!
நம் இந்தியாவைச் சேர்ந்த வில்வித்தை வீர தம்பதியான தீபிகா மற்றும் அவரது கணவர் அதானு தாஸ் ஆகியோர் உலகக் கோப்பை போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்தியாவின் ஜார்கண்ட் மாநகரைச் சேர்ந்தவர் தீபிகா குமாரி மற்றும் பராநகர் பகுதியைச் சேர்ந்தவர் அவரது கணவர் அதானு தாஸ். இந்திய வில்வித்தை நட்சத்திரத் தம்பதியான இவர்கள், தற்பொழுது சென்ட்ரல் அமேரிக்காவின் குவாத்தமாலா நகரத்தில் நடந்து கொண்டிருக்கும் வில்வித்தை உலகக் கோப்பை போட்டியில் தனித்தனியாய் விளையாடிய ஆட்டத்தில், மூன்று தங்கப் பதக்கங்களும் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை புரிந்துள்ளனர். மேலும் இதுவரை தீபிகா குமாரி மூன்று முறை வில்வித்தை உலகக் கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளார் மற்றும் அவரது கணவர் அதானு தாஸுக்கு இது முதல் வெற்றியாகும்.
இதுகுறித்து தீபிகா கூறுகையில், “இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு பல நாட்கள் ஆகியதால் இதயத்துடிப்பு பலமாக அடிக்கத் தொடங்கிய போதிலும் எனக்கு உற்சாகமாகவே இருந்தது. நாங்கள் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் தீபிகாவின் கணவர் அதானு தாஸ் கூறுகையில், கனவுகள் எல்லாம் நிறைவேறியது போல் மன நிறைவாக உள்ளது. இது எனது முதல் வெற்றியாகும். நானும் என் மனைவியும் வெற்றி பெற்று விட்டோம்” என்று உற்சாகமாகக் கூறினார். இதனையடுத்து அதானு தாஸ் டோக்கியோ நகரில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.