சுற்றுச்சூழல் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் 177 வது இடத்தில் இந்தியா!
நம் நாட்டின் மொத்தக் காடுகளின் பரப்பு 6 லட்சத்து 30 ஆயிரம் ச.கி.மீ. இந்தியாவில் ஆண்டுக்கு 0.6 சதவிகிதம் காடுகள் அழிக்கப்பட்டுக்கொண்டுள்ளன என்றெல்லாம் முன்னரே செய்திகாள் வெளியான நிலையில் சுற்றுச்சூழல் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் 177 வது இடத்தில் இந்தியா உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.மேலும் இந்த பட்டியலில் மொத்தம் 180 நாடுகள் மட்டுமே உள்ளனவாம் .
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 48-வது உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த மாநாட்டில்தான் காற்று மாசு மற்றும் காடுகள் பாதுகாப்பு உள்பட உலகளாவிய பசுமை நாடு களுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் பட்டியலை வெளியிட்டனர்.
இது குறித்த புள்ளி விபரங்களில் கூறப்பட்டுள்ளதாவது:
சுத்தமான தண்ணீர், சுத்தமான காற்று, காடுகள் அழிப்பு, மீன் வளம், மீத்தேன், கரிய அமில வாயு வெளியேறுதல், கழிவு நீர் சுத்திகரிப்பு, விவசாயம், பல்லுயிர் அழிப்பு உள்பட 10 வகையான பிரச்னைகள், 24 வகையான அளவீடுகள் வைத்து மொத்தம் 180 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வில் இந்தியா 177வது இடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 141 வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 177 இடத்திற்கு பின்நோக்கி சென்றுள்ளது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. கொலம்பியா பல்கலைகழகமும் உலக பொருளாதார அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆய்வில் சுவிட்சர்லாந்து நாடு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிரான்ஸ், டென்மார்க், மால்ட்டா, சுவீடன் ஆகிய நாடுகள் உள்ளது. பாகிஸ்தான், சீனா, இந்திய ஆகிய 3 நாடுகள் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
காடுகளை அழிப்பது, காற்று மாசுபாடுகளை கண்டறிந்து கட்டுப்பாட்டில் வைக்காமலிருப்பது, தொழிற்சாலை கழிவுகள், நீர் மேலாண்மையில் போதிய கவனமில்லாமல் இருப்பது உள்பட பல்வேறு காரணங்களால் இந்தியா கடைசி 3 வது இடத்திலிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அடிசினல் ரிப்போர்ட் :
உலக அளவில் 30 சதவீத நிலப் பகுதிகள் காடுகளால் சூழப்பட்டுள்ளன. இந்தியாவில் 19.2 சதவீதம் காடுகள் இருக்கின்றன. 600-க்கும் மேற்பட்ட வகையான மரங்கள் இருக்கின்றன. 17,500 வகையான பூக்கும் தாவரங்கள் இருக்கின்றன. சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 13 மில்லியன் ஹேக்டேர் காடுகள் அழிக்கப்படுகின்றன. அதாவது இங்கிலாந்து நாடு அளவுக்கு பரப்பளவுள்ள காடுகள் அழிந்து வருகின்றன. அதனால் 80 சதவீத பல்லுயிர் பெருக்கம் அழிவை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறது. தட்பவெப்ப நிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், மரங்கள், வனவிலங்குகள் அழிப்பு போன்றவை காடுகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.