இண்டர்நெட் யூஸ் பண்ணுவதில் இந்தியாதான் டாப்; ஆனால் யூஸ்லெஸ் ஜாப்தான் நடக்குது!
உள்ளங்கையில் உலகைக் கொண்டு வந்துவிட்ட ஸ்மார்ட்போன்களின் வருகையால் இன்டர்நெட் பயன்பாடு தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இருப்பினும், உலக அளவில் இந்தியா வில் இணைய வேகம் மோசமாகவே இருக்கிறது என்பதுதான் சோகம். கடந்த பிப்ரவரி மாத புள்ளி விவரப்படி இந்தியாவின் சராசரி வேகம் நொடிக்கு 9.01 எம்பி. நவம்பரில் இது நொடிக்கு 8.8 எம்பியாக இருந்தது. உலக அளவில் ஏறக்குறைய கடைசியாக 109 இடத்தில் இந்தியா உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது உலகம் முழுவதும் உள்ள இணைய வேகம் தொடர்பாக ஆய்வு செய்த நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாடுகளில் அதிகபட்ச வேகத்துடன் நார்வே முதலிடத்தில் உள்ளது. ஐஸ்லாந்து, நெதர் லாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், கத்தார், ஆஸ்திரேலியா, ஹங்கேரி, கனடா, பெல்ஜியம் ஆகியவை முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. ஆனால் இந்தியா 9.01 எம்பி டவுன்லோடு வேகத்துடன் கடைசி இடத்தில் இருக்கிறது என புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மொபைல் இணையதளத்தை அதிகமாக பயன்படுத்துவதில் மற்ற நாடுகளை இந்தியா விஞ்சிவிட்டது என்பதை மற்றொரு ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
உலக அளவில் இன்டர்நெட் எந்த நாட்டில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கடந்த ஓராண்டு இணைய பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்தியாவில் இணைய பயன்பாடு 5 மடங்கு அதிகரித்துள்ளது ஒரு மாதத்தில் சராசரியாக 2.1 எக்சாபைட் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு எக்சாபைட் என்பது 10 லட்சம் டெராபைட்டை குறிக்கும். ஒரு டெராபைட் ஆயிரம் ஜிபி. வட அமெரிக்கா 1.8 எக்சாபைட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய யூனியன் 1.2 எக்சாபைட், லத்தீன் அமெரிக்க நாடுகள், சீனா தலா 1 எக்சாபைட், கிழக்கு ஐரோப்பா 0.7 எக்சாபைட், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகள் 0.6 எக்சாபைட் பயன்படுத்தியுள்ளன.
உலக அளவில் இந்தியாவின் இணைய பயன்பாடு அதிகரிப்பதற்கு ஜியோவின் வருகை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு நிபுணர்கள் கூறியதாவது: இந்தியாவில் இணைய பயன்பாட்டுக்கான கட்டணம் அதிகமாக இருந்தது. மாதத்துக்கு 2 ஜிபி பயன்படுத்தவே 200 ரூபாய்க்கு மேல் பேக்கேஜ் கட்டணம் அளிக்க வேண்டி வந்தது. இதுதவிர பேசுவதற்காகவும் தனியாக செலவிடவேண்டும். ஆனால் 4ஜி சேவையை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ, துவக்கத்தில் இலவசமாகவே அளித்தது. தற்போது மொபைல் நிறுவனங்களிடையே உள்ள போட்டி காரணமாக ஒரு ஜிபி 12 ரூபாயில் இருந்து சுமார் 5 ரூபாயாக குறைந்து விட்டது. அதிலும் போஸ்ட் பெய்டை விட ப்ரீ பெய்டு இணைய மற்றும் அழைப்புகளுக்கான பேக்கேஜ் கட்டணம் மிக குறைவு.
முந்தைய அளவுடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய இணைய கட்டணம் சுமார் 60 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அதிகமாக இணையதளங்களை பார்த்துள்ளனர். குறிப்பாக அலுவலகத்திலும், வீட்டிலும், பயணங்களின்போதும் வாட்ஸ் ஆப், பேஸ்புக், யூடியூப் என எந்த நேரமும் மொபைலிலேயே இந்தியர்கள் மூழ்கியதற்கு இணைய கட்டணம் குறைவு மற்றும் இலவச சேவைகள்தான் காரணம். இதனால்தான் உலக அளவில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. அதே சமயம் அலுவலகத்தில் வேலை பார்க்காமல் வாட்ஸ்ஆப், பேஸ்புக் பார்ப்பதால் வேலைத்திறன் குறைகிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்க்து.