ஸ்விஸ் வங்கி: இந்தியர்களின் கணக்கு பற்றிய முதல் பட்டியல் வந்தாச்சு!
இந்தியா – ஸ்விஸ் வங்கிக்கு இடையே நடைபெற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்கு பற்றிய முதல் பட்டியல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் இந்தியாவை சேர்ந்த ஏராளமான தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கறுப்பு பணத்தை கோடி கணக்கில் பதுக்கி வைத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு பொறுப்பேற்றதும் இந்த கறுப்பு பணத்தை மீட்கவும் பதுக்கி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேரடி வரிகள் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சுவிஸ் நாட்டிற்கு சென்று கருப்பு பண பதுக்கல் குறித்து ஆலோசனை நடத்தினர். அதேபோல் சுவிட்சர் லாந்தைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்தியாவிற்கு வந்து ஆலோசனை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் வங்கி கணக்கு விபரங்களை பரிமாறிக் கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி வங்கி கணக்கு தகவல்களை தானாகவே பரிமாறிக் கொள்ளும் நடைமுறை இந்த மாதத்திலிருந்து அமலுக்கு வந்தது. சுவிஸ் அதிகாரிகள் தங்கள் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் அடங்கிய விபரங்களை மத்திய அரசிடம் சமீபத்தில் அளித்தனர்.
வங்கி கணக்கு எண், கணக்கில் இருக்கும் நிலுவை தொகை, எங்கிருந்து பணம் வருகிறது என்பது போன்ற விபரங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த விபரங்களின் ரகசியம் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் ஒப்பந்தம் உள்ளது. சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த விபரங்களில் அவர்கள் வங்கிகளில் பயன்படுத்தி வரும் பெயர், முகவரி, பிறந்தநாள், வரி செலுத்தும் அடையாள எண் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருக்கும். அத்துடன் அவர்கள் சுவிஸ் நாட்டில் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர் என்ற விபரமும் இடம் பெற்றிருக்கும்.
ஸ்விட்சர்லாந்தின் ஃபெடரல் வரி நிர்வாகத்துக்கும், 75 நாடுகளுக்கும் இடையே நடந்த இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அந்தந்த நாட்டு குடிமக்கள், ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு குறித்த விவரங்கள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். அந்த வகையில் அடுத்த பட்டியல் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.