கங்கை நதி மாசு விவகாரம் : சிகரெட் பாக்கெட்டில் கூட எச்சரிக்கை வாசகம் இருக்குது.. ஆனா ..! ?
நம் நாட்டின் தேசிய நதி கங்கை (Ganga River) ஆகும்.இது இந்தியாவின் மிக நீளமான நதி.இதனை கேன்ஜஸ்(Ganges) என்றும் அழைப்பார்கள்.கங்கையை இந்துக்கள் புனித நதியாகக் கருதுகின்றனர்.கங்கையை ஒரு நதி என்று மட்டும் கூறி விட முடியாது.இது இந்திய நாடு முழுவதும் ஒன்றிணைக்கும் அம்சமாக உள்ளது.இது 2510 கி.மீ தூரத்திற்கு பாய்ந்து ஓடி கடலில் கலக்கிறது.
கங்கை புனித நதி என்று கூறப்பட்டாலும் , இது உலகிலேயே அதிகம் மாசு அடைந்த ஒரு நதியாக உள்ளது. மலம், பிளாஸ்டிக் குப்பைக்கூளங்கள்,பூ,மாலை,பாதி எரிந்த பிணங்கள் என கங்கையில் சேர்கின்றன.கங்கை நதிக்கரை ஓரத்தில் 90 சுடுகாடுகள் உள்ளன.பிணத்தின் உறவினர்கள் எரியூட்டிய உடன் வெட்டியானிடம் பணம் அதிகம் தந்து,பாதி வேகும்போதே நதியில் தள்ளிவிடச் சொல்கின்றனர்.ஏனென்றால் இறந்தவர் அப்போதுதான் நேராக சொர்க்கத்திற்குச் செல்ல முடியும் என நம்புகின்றனர்.இதனை பி.பி.சி –டாக்குமெண்டரியில் காணலாம்.
காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கங்கையில்தான் நாள்தோறும் கலக்கிறது.இதன் அளவு 20 மில்லியன் காலனாகும்.நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் கங்கைக்கரையில் எரிக்கப்பட்டு கங்கையில் கரைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் மோட்சத்துக்காக 9000 கிழப் பசுக்கள் உயிரோடு கங்கையில் தள்ளப்பட்டு கொல்லப்படுகின்றன. இதன் விளைவாக 1927,1963 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் காசி அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையான நோய்க்கு ஆளாகி ஆயிரக்கணக்கில் மாண்டனர்.
இன்னொரு புள்ளி விவரம் முக்கியமானது இந்தியாவில் மற்ற பகுதிகளில் எல்லாம் குழந்தைகள் மரணம் ஆயிரத்திற்கு 94 என்றால் கங்கை பாயும் காசி வட்டாரத்திலோ 133.94 ஆகும்.மேலும் கங்கை நதிக்கரை நகரங்களில் வசிக்கும் மக்கள் பத்துக்கு மூன்று பேர் வீதம் நீர் தொடர்பான நோய்களால் இறக்கின்றனர்.
இப்படி புண்ணிய நதியான கங்கை மிகவும் மோசமான அளவு மாசடைந்துள்ள விவகாரத்தில் கவலையை வெளிப்படுத்தியுள்ள டெல்லி பசுமைத் தீர்ப்பாயம், ஹரித்துவாரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் உன்னோவ் வரையில் கங்கை நீர் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ உகந்தது கிடையாது என கூறியுள்ளது.
இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியாமல் அப்பாவி மக்கள் அதனை குடிக்கிறார்கள், குளிக் கிறார்கள் எனவும் கவலையை வெளிப்படுத்தியுள்ளது. “கங்கைக்கு மரியாதை செலுத்தி வணங்கும் அப்பாவி மக்கள் அதன் நீரை குடிக்கிறார்கள், குளிக்கிறார்கள். அவர்களுடைய உடலுக்கு பெரும் தீங்கு ஏற்படும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று சிகரெட் பாக்கெட்டில் எச்சரிக்கை வாசகம் இருக்கும் போது, கங்கை மாசடைந்துள்ள நிலையில் இதுபோன்ற எச்சரிக்கையை ஏன் மக்களிடம் எடுத்துச் செல்லக்கூடாது?” என கேள்வியை எழுப்பியுள்ளது.
கங்கையில் 100 கிலோ மீட்டர் இடைவேளியில் தண்ணீர் குடிப்பதற்கு மற்றும் குளிப்பதற்கு உகந்ததா என்பது தொடர்பாக விளம்பர பலகையை வைக்க வேண்டும் என்று என்எம்சிஜிக்கு (தேசிய கங்கை நதி தூய்மை இயக்கம்) உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், கங்கையில் எங்கெல்லாம் குளிக்க மற்றும் குடிக்க தண்ணீர் உகந்த அளவில் உள்ளது என்பது தொடர்பான மேப்பை என்எம்சிஜி மற்றும் மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் தங்களுடைய இணையதளத்தில் இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.