‘ஒரு பய மதிக்க மாட்டேங்கறாங்க யுவர் ஆனர்!’ – கோர்ட்டில் பொன் மாணிக்கவேல் புகார்!
தமிழக கோயில்களிலிருந்து பல காலங்களாகக் கடத்தப்பட்டு வந்த சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் இன்று விசாரணை நடந்தது. அதில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் ஆஜராகி, “ இந்த வழக்கு விசாரணைக்கு தனக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் அது இன்னும் முழுமை யாக நிறைவேற்றப்படவில்லை. அதேபோல தன்னிடம் ஒப்படைக்கவேண்டிய ஆவணங்களையும் இன்னும் ஒப்படைக்கவில்லை. குறிப்பாக டி.எஸ்.பி. பன்னீர்செல்வம் தன்னுடைய அலுவலகத் திற்கே வரவில்லை. அவருக்கு பலமுறை மின்னஞ்சல் அனுப்பியும் அதற்கு பதிலில்லை என கூறியுள்ளார் சிலைக் கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல். மேலும் இதற்காகச் சம்பந்தப்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளரைக் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், ‘நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க அரசாங்கத் தைத் தடுப்பது எது’ என்று கேள்வியெழுப்பினர். “இது புனிதமான இடம். இங்கு வழங்கும் உத்தரவுகள் நிறைவேற்றப்பட வேண்டும். குற்றத்தின் அடிப்படைப் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது வரை கண்டறியப்படும்” என்று அவர்கள் தெரிவித்தனர். சில நிர்வாகக் காரணங்களுக்காகத் தாங்கள் பொறுமையாக உள்ளதாகக் கூறினர்.
“அதற்காக உத்தரவுகளைத் தட்டிக்கழிக்கலாம் என்று அர்த்தமல்ல. பொன்மாணிக்கவேலின் குற்றச்சாட்டிற்கு வரும் வியாழக்கிழமைக்குள் தமிழக டிஜிபி பதில் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு உத்தரவிட்டது.
அத்துடன் இந்த வழக்கு விசாரணையின்போது, சிலைக் கடத்தல் வழக்குகளைத் தொடர்ந்ததால் தனக்கு பாதுகாப்பில்லை என்றும், பல முறை பாதுகாப்பு கோரி விண்ணப்பித்தும் தமிழக அரசு தனக்குப் பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், தனக்கு ஏதாவது நிகழ்ந்தால் டிஜிபி தான் பொறுப்பு என்றும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் புகார் தெரிவித்தார்.தனக்குப் பாதிப்பு ஏற்பட்டால், தன் குடும்பத்திற்கு 10 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, யானை ராஜேந்திரன் புகார் குறித்து பதில் அளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டனர் நீதிபதிகள்.