இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்!

இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வென்றிருந்தது. 7-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமிருந்ததாலும், 3-வது அலை வரலாம் என்ற பேச்சு கிளம்பியதாலும் இந்த போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இந்த கொரோனா காலத்தில் நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

16 அணிகள்

இதன்படி 16 அணிகள் இடையிலான 7வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதில் ஓமனில் 6 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மற்ற அனைத்து ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதிக்கும் நிலையில், தொடக்கத்தில் முதல் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன.

முதல் சுற்றில் பங்கேற்கும் 8 அணிகளில் ‘ஏ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா, ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதிய பிறகு, இரு பிரிவிலும் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

பரிசுத் தொகை விவரம்

சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இரு முதல் சுற்று அணிகள், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு முதல் சுற்று அணிகள் அங்கம் வகிக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு நுழையும்.

உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடியும், 2-வது இடத்தைப் பெறும் அணிக்கு ரூ.6 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். முதல் நாளான இன்று மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஓமன்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு மக்முதுல்லா தலைமையிலான வங்காளதேச அணி, கைல் கோட்ஸிர் தலைமையிலான ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது.

இந்தியா – பாகிஸ்தான் மோதல்

இந்திய அணி வருகிற 24ந் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை துபாயில் சந்திக்கிறது. 2007ஆம் ஆண்டு தோனி தலைமையில் உலக கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி, தற்போது ஆலோசகராக நியமிக்கப்பட்ட தோனியின் துணையுடன் விராட் கோலி தலைமையில் களம் இறங்குகிறது.

ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், கோலி, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார், இஷான் கிஷன் என்று பேட்டிங் வரிசையில் அதிரடிக்கு குறைவில்லாத வீரர்கள் உள்ளனர். இதே போல் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாக்குர், ஜடேஜா, அஸ்வின், வருண் சக்ரவர்த்தி என்று தரமான பந்து வீச்சாளர்களும் அணிவகுத்து நிற்கிறார்கள். ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்தினால் 2-வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

error: Content is protected !!