காந்திஜியின் பேரன் கனு ராமதாஸ் காந்தியை கண்டுக்க ஆளில்லை!
நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பேரன் கனு ராமதாஸ் காந்தி. சுதந்திர போராட்டத்தின் போது, காந்தி உப்புசத்தியாகிரக யாத்திரை சென்ற போது சிறுவனாக இருந்த கனு காந்திக்கு இப்போது வயது 87. இவர் அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதன்பின், அமெரிக்காவில் சிறிது காலம் வசித்து விட்டு 2014ம் ஆண்டில் தனது மனைவியுடன் இந்தியா திரும்பினார். மனைவியுடன் பல ஊர்களுக்கு சென்று ஆசிரமங்கள் உள்பட பல இடங்களில் தங்கினார்.
இவர்களை கவனிப்பதற்கு யாரும் இல்லாத நிலையில், டெல்லியில் உள்ள முதியோர் விடுதி ஒன்றில் தஞ்சம் அடைந்தனர். இந்த தகவல் அறிந்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களை சந்தித்து விட்டு திரும்பினார். பிரதமர் மோடியிடம் கூறி உதவுவதாக வாக்குறுதி அளித்து விட்டு சென்றார். தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள கனு காந்தி, மகாத்மா காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சூரத்தில் சிவ ஜோதி டிரஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடன் வயதான இவரது மனைவி சிவலட்சுமி உள்ளார். இவர்களை கவனிப்பாரும் இல்லை. பணவசதியும் இல்லை. இந்த நிலையை கண்டு இவரது பழைய நண்பரான அகமதாபாத்தைச் சேர்ந்த திமாந்த் பாதியா என்பவர், ரூ.21 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார்.
திமாந்த் பாதியா கூறுகையில், ‘‘பிரதமர் மிகவும் அக்கறையாக விசாரித்தார். எந்த உதவியும் செய்ய தயாராக இருப்பதாக கூறியிருந்தார். ஆனால், இது வரை பிரதமரிடம் இருந்து உதவி கிடைக்கவில்லை. குஜராத் மாநில அமைச்சர்கள் யாரும் கூட வந்து பார்க்கவில்லை’’ என்றார். இந்நிலையில், மும்பையில் வசிக்கும் கனு காந்தியின் வயதான சகோதரி உஷா கோகனியும், பெங்களூருவில் வசிக்கும் இன்னொரு சகோதரி சுமித்ரா குல்கர்னியும், கனுகாந்தியிடம் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.