ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க தடை இல்லை- ஐகோர்ட் தீர்ப்பு!

ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க தடை இல்லை- ஐகோர்ட் தீர்ப்பு!

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓ.பி.சி.) 50% இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப் படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் அண்ணா தி.மு.க., திமுக, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மருத்துவ படிப்புகளில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும் என்றும், மத்திய அரசு கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டுமே என்றும், இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது

தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு முறை இருக்கும் போது மத்திய அரசு 27% இடஒதுக்கீடு வழங்குவது தவறானது என்றும், தமிழகத்தில் தான் அதிகளவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறபடுத்தப்பட்ட மக்கள் உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், மாநில அரசுகளின் ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்ற முந்தைய உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏன் மத்திய அரசு கட்டுப்படவில்லை? என கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இடஒதுக்கீடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடுவழங்க எந்த தடையும் இல்லை. மருத்துவ படிப்பில், ஓ.பி.சி., பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தர உச்சநீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை ஏற்க முடியாது. இட ஒதுக்கீடு வழங்க, விரைவாக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலை கருதி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறினர்.

இட ஒதுக்கீடு கோர ஓ.பி.சி., பிரிவினருக்கு உரிமை உள்ளது. அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது. வழங்க எந்த தடையும் இல்லை. குறைந்தபட்ச கல்வி தகுதியை மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசித்து இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க வேண்டும். மாநில அரசு களுடன் ஆலோசித்து, மத்திய அரசு 3 மாதங்களில் முடிவை அறிவிக்க வேண்டும்.-இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!