76 வது பிறந்த நாள் காணும் இசைஞானி இளையராஜா நீடுடி வாழ வாழ்த்துவோம்…!

76 வது பிறந்த நாள் காணும் இசைஞானி இளையராஜா நீடுடி வாழ வாழ்த்துவோம்…!

பெரிய அளவுல எழுதமுடியலைனாலும்.. சுருக்கமாய்..முதல் படமான அன்னக்கிளிக்காக முதன் முதலாய் ரெக்கார்டிங்கிற்கு அமரும்போதே பவர் கட்.. ஆனால் அபசகுனத்தையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு அன்னக்கிளி பாடல்களை படு ஹிட்டாக்கி 1976ல் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கச் செய்தார்..

ஜி.ராமநாதன், எஸ்எம் சுப்பையா நாயுடு கேவி மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி போன்றோர் கோலேச்சிய இசை உலகில் தனியாக தனக்கென பாணியை கடைபிடித்தால்தான் சாதிக்க முடியும் என்பதை தெளிவாகவே புரிந்துகொண்டார்..

களத்தில் உள்ள எம்எஸ்வியை மீறி முன்னுக்கு வர வேண்டும் என, எழுபதுகளின் இறுதிகளில் போராடிய போது போட்ட பாடல்கள்,. அவற்றில் பறந்த மண்வாசனை, அப்பப்பா அத்தனையும் வியக்கத் தக்கவை..

அதனால்தான், இயக்குநர்கள் தேவராஜ்-மோகன் தொடர்ந்து கொடுத்த வாய்ப்பை அவர் தவறவிட வேயில்லை

நான் பேசவந்தேன் ( பாலூட்டி வளர்த்த கிளி),  ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் ( உறவாடும் நெஞ்சம்), கண்ணன் ஒரு கை குழந்தை (பத்ரகாளி) என மிரட்சியான ஹிட் பாடல்களை கொடுக்க முடிந்தது

இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது..என்ன ஒரு மாஜிக்.. ஆயிரம் தடவைக்கு மேல் கேட்டிருந் தாலும். இன்றைக்கும் தினம் இரண்டு தடவையாவது…

சோளம் வெதைக்கையிலே…
ஆயிரம் மலர்களே மலருங்கள்,
நினைவோ ஒரு பறவை..விரிக்கும் அதன் சிறகை…
ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி….
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு.
அந்தப்புரத்தில் ஒரு மகராணி…
தென்னை மரத்துலு தென்றலடிக்குது (அவரின் முதல் டூயட்)
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்..என பின்னிபெடலெடுத்தார்….

பாடலுக்கான இசையை தாண்டி பின்னணி இசையி லும் கலக்கினால் இன்னும் உச்சம் தொடலாம் என்பது 1980களின் துவக்கத்தில் புரிந்துவிட்டது. அதனால்தான் அந்த ஏரியாவிலும் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

பக்கா கமர்சியல் படமான கமலின் காக்கிச்சட்டையில் பின்னணி இசை பல இடங்களில் அதகளம் செய்யும்.. டைட்டிலியே தனி கச்சேரி செய்திருப்பார்..பிணத்தை விமானத்தில் கடத்திக்கொண்டு வந்து விமான நிலையத்திலிருந்து காரில் ஏறுகிற வரை விறுவிறுப் பான காட்சிகளின், எடிட்டிங் கிற்கு பின்னணி இசை அவ்வளவு சவால் விட்டிருக்கும்.. படத்தின் போக்கில் தான் அதன் வீரியம் புரியம்..

முதல் மரியாதை, நாயகன், தளபதி போன்ற படங்களை போட்டுவிட்டு பக்கத்து அறையில் படுத்துக் கொண்டு இசையை மட்டும் காதில் கேட்டால் அப்படியொரு அலாதியான சுகம் கிடைக்கும்.. படம் முழுக்க இசையை அருவியாக ஓடவிட்டிருப்பார்..

திரையிசையில் தாம் மட்டுந்தான் என ஒரு நிலை உருவானபோது…80 களின் மத்தியில் தென்றலே என்னைத்தொடு. வைதேகி காத்திருந்தாள், ஆண்பாவம்..உதயகீதம். காக்கிச்சட்டை, புன்னகை மன்னன், மௌனராகம் நாயகன் என அவரின் இசை, அப்போது தொடர்ந்து தாக்கிய சுனாமிகளே

கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ்சில் மோகன் கதாநாயகனாக மைக் பிடித்துக்கொண்டு நின்றால் மட்டும் போதும். பாடல்களை போட்டு ஹிட்டாக்கி வெள்ளிக்காசுகளை மூட்டை மூட்டையாக கொட்டவைத்த வரலாறெல்லாம் வியப்பானவை..

டவுசர், மாடு, குடிசை வீடு காமாச்சி, மீனாச்சி என ஏதாவது இரண்டு மூன்று பெண் கேரக்டர்கள். ஹீரோவாக ராமராஜன்.. அப்புறம் ஒரே தேவை . இவரின் இசை..எல்லாமே பாட்டுக்காக ஓடி வசூலை வாரி வாரி குவித்து கோடம்பாக்கத்தையே வியக்க வைத்ததையெல்லாம் விவரிக்க தனி புத்தகமே போடணும்..

நம்மைப் பொருத்தவரை அவரின் முதல் பத்தாண்டுகள் இன்றளவும் வியப்பாகவே உள்ளது..

ஒரே நாள் உனை நான் ( இளமை ஊஞ்சலாடுகிறது)
நானே நானா யாரோ..(அழகே உன்னை ஆராதிக்கிறேன்)
தென்னை மரத்துல தென்றல் அடிக்குது (லட்சுமி)
சின்னப்பொன்னுசேலை (மலையூர் மம்பட்டியான்)
பூமாலையே தோள் ( பகல் நிலவு)
ராஜா கைய வெச்சா (அபூர்வ சகோதர்கள்)
சுந்தரி கண்ணால் ஒரு சேதி ( தளபதி)
ஆனந்த தேன் காற்று..(மணிப்பூர் மாமியார் படம் வரவில்லை)
பூங்காற்று திரும்புமா ( முதல் மரியாதை)

1980 களின் துவக்கத்தில் பூஜை போடப்பட்ட
மணிப்பூர் மாமியார் படத்தில் ஒரு பாடல்..
ரசிகனே என் அருகில் வா என அவரே பாடி கலக்கிய பாடல் அது.. அதில் கடைசியாக இப்படி வரும்..

”தெரிந்ததை நான் கொடுக்கிறேன்
தெம்மாங்கு ராகங்கள் சேர்த்து
இதயங்கள் சில எதிர்க்கலாம்
எதிர்ப்பவர் அதை ரசிக்கலாம்.
நான் காணும் உள்ளங்கள்
நல் வாழ்த்து சொல்லுங்கள்
நாளும் நாளும் இன்பம் இன்பம்.”

76 வது பிறந்த நாள் காணும் இசைஞானி இளையராஜா நீடுடி வாழ வாழ்த்துவோம்…

ஏழுமலை வெங்கடேசன்

error: Content is protected !!