அரசியலின் அதிசயம் காஞ்சித்தலைவன் அறிஞர் அண்ணா!

அரசியலின் அதிசயம் காஞ்சித்தலைவன் அறிஞர் அண்ணா!

ல்வேறு தேசிய இனங்களை கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தை ஒன்றுபட்டு கட்டிக் காப்பது அதன் பன்முகத் தன்மைதான் என்பதை முழுவதுமாக நம்பியவர்.. இனத்தையும் தமிழ் மொழியையும் உயிராய் நேசித்தவர்.. தமிழ் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அத்தனை பிராந்திய மொழிகளும் அழிந்து போகாமல் கட்டிக்காக்க வேண்டும் என்று விரும்பியவர்..அதிகம் பேரால் பேசப்படும் இந்திதான் இந்த நாட்டின் தேசிய மொழி என்று டெல்லி அறிவிக்க முயன்ற போதெல்லாம் தடைக்கல்லாய் திகழ்ந்தவர்..!பெரும்பான்மைக்குத்தான் முதன்மை என்றால் இந்த நாட்டில் எண்ணிக்கையில் அதிகம் உள்ள எலியை தேசிய விலங்காக அறிவிக்காமல் புலியை அறிவித்தது ஏன் என்று வினா எழுப்பியவர்.. காக்காயை தேசிய பறவையாக அறிவிக்காமல் மயிலை அறிவித்தது ஏன் என்றும் கேட்டவர்..!இந்தியாவுக்குள் தமிழ்நாடு தனி மாநிலம் என்றாலும் உலக அளவில் அதன் பெருமை தனியாக நிலைநாட்டப்பட வேண்டும் என்று கனவு கண்டு அதற்காகவே வாழ்நாளெல்லாம் உழைத்தவர்.. ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மத்திய அரசு வைத்துக்கொண்டால் நாசமே மிஞ்சும் என்று எச்சரித்த தீர்க்கதரிசி..!தமிழினத்தின் மாண்பு மங்கிப்போய்விடக்கூடாது என்று மாநில சுயாட்சியை வற்புறுத்தி அதற்கான உரிமை களை மீட்க போராடியவர்.. அதனால்தான் இன்று தமிழகம் பல விதங்களில் முன்னேறியிருக்கிறது..மாநில சுயாட்சி அதிகாரத்தை கோட்டை விட்டதால்தான் இன்னும் பல மாநிலங்களை மத்திய அரசு தன் கோரக்கரத்தால் அடக்கியாண்டு கொண்டிருக்கிறது அதிலும் வடகிழக்கு மாநிலங்களின் கதை இன்னமும் பரிதாபம்.

அவ்வளவு ஏன், நம்ம புதுச்சேரியை எடுத்துக்கொள்ளுங்கள்.. அருகில் உள்ள திண்டிவனத்திலும் கடலூரிலும் காங்கிரஸ் கட்சிக்கு பலமே இருக்காது..ஆனால் புதுச்சேரியில் பலமாக இருக்கும்..தமிழ்கத்தில் பெரிய இயக்கங்களாக திகழும் திமுகவும் அதிமுகவும் புதுச்சேரியில் மட்டும் மூச்சு வாங்குவது ஏன்? ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மத்திய அரசு வைத்திருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்..-ஒரு கான்ஸ்ட்டபிளைக்கூட புதுச்சேரி முதலமைச்சரால் ஒன்றும் செய்துவிட முடியாது.. எல்லாமே மத்திய உள்துறை அமைச்சகம்..மத்தியஅரசு போடும் பிச்சையை பொறுத்தே புதுச்சேரிக்கு நிதியாதாரம்.. இப்படியிருக்கும்போது எவன் மாநில கட்சிகளை நம்பி போவான்..

இந்த கண்றாவிகளையெல்லாம் பார்க்கும்போதுதான் மாநில சுயாட்சியை வலியுறுத்தி பல விஷங்களில் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்ந்த அண்ணாவின் பெருமை புரிய வரும்..அண்ணாவிற்கு பின்னால் வந்தவர்கள் அவரின் பற்றற்ற பாதையை அப்படியே பின்பற்றியிருந்தால் கொள்ளைக்கார அரசியல்வாதிகள் என்ற வர்க்கம் அவ்வளவாக உருவாகியிருக்காது..மிட்டா மிராசுகளும் பண்ணையார்களும் அமர்ந்த பீடங்களில் சாமான்ய மக்களும் அமரும் வகையில் அரசியலை செதுக்கிய அற்புதமான சிற்பி அண்ணா..தமிழினத்தின் பெருமையை உயிர் மூச்சாக சுவாசித்ததால்தான் எதையும் துணிச்சலுடன் பல சம்பிரதாயங்களை அவரால் உடைக்கமுடிந்தது..!அண்ணா முதலமைச்சர் பதவியேற்க அவரது நுங்கம் பாக்கம் வீட்டிலிருந்து ராஜாஜி ஹாலுக்கு ரெடியாகிறார். நம்மையும் அழைத்துச் செல்வார் என்று மனைவி ராணி மற்றும் குடும்பத்தினர் தயாராக இருக்கின்றனர். ஆனால் அண்ணாவோ, யாரையும் அழைக்காமல் ஒரு பழைய கைத்தறி துண்டை தோளில் போட்டுக்கொண்டு காரில் ஏறி, பதவியேற்புக்கு புறப்பட்டு போய்விடுகிறார். முதலமைச்சர்கள் பதவியேற்பதை அந்த அரங்கில் உள்ளவர்கள் மட்டுமே அன்றைக்கு கேட்கமுடியும்- ஆனால் அண்ணா முதலமைச்சராக பதவியேற்கும்போது, ”விழா அரங்கின் வெளியே கட்டுங்கடா ஒலிபெருக்கிகளை. என் பதவி பிரமாணத்தை என் சமான்ய மக்களும் கேட்கட்டும்” என்று உத்தரவு போட்டார்..

அண்ணாவின் மீது உயிரையே வைத்திருந்து அவர் பெயரிலேயே தனி இயக்கம், கொடி கண்ட எம்ஜிஆர் இதை மனதில் வைத்தே தாம் முதலமைச்சராக முதன் முதலில் பதவியேற்றபோது மக்கள் முன்னிலை யிலேயே அதனை செய்து காட்டினார்..இந்தி திணிப்பை கண்டுகொள்ளாமல் விட்டால் அது தமிழின் குரல்வளையை கடித்து குதறிவிடும் என்று தீர்க்கமாக நம்பியவர் அண்ணா..அதனால்தான் இந்தி திணிப்பை விரட்டி விரட்டி வேட்டையாடச் சொன்னார்.இந்தியா முழுக்க பள்ளிகளில் இங்கிலீஷ் கற்பிக்கப்படும்போது அது ஏன் தொடர்பு மொழியாக இருக்கக்கூடாது?

உலகத்தொடர்புக்காக இங்கிலீஷையும் உள்நாட்டு தொடர்புக்காக இந்தியையும் தமிழர்கள் ஏன் கற்கவேண்டும்?பெரிய நாய் நுழைவதற்காக பெரிய கதவும் சிறிய நாய்க்காக சிறிய கதவும் என இரண்டு கதவுகளையா வைப்போம்? பெரிய கதவை வைத்துவிட்டால் அதில் சிறிய நாயும் பெரிய நாயும் வந்துபோகப்போகின்றன என்று சொன்னவர் அறிஞர் அண்ணா…தன்னுடன் இருந்தவர்கள் பிரிந்து போய் எதிர் அரசியல் செய்ய ஆரம்பித்த போதும் கூட அவர்களின் தனித்திறமையை கேவலப்படுத்தாமல் நாகரிகமாக” மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்றார். நாடாளுமன்றத்தில் பிரதமர் நேருவை எதிர்கொண்ட போது “”நீங்கள் கட்டிமுடிக்கப்பட்ட கோட்டை நான் கொட்டி வைக்கப்பட்டிருக்கும் செங்கல்” என்று தன்னடக்கத்தோடு போரிட்டவர்.

மதராஸ் மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என பெயர் சூட்டி பிறந்த மண்ணையே அழகுபடுத்தியவர். நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தோம் என்று சொல்லி நாடு முழுவதும் அரசியல் ஆதிக்கம் செலுத்திவந்த காங்கிரசுக்கு எதிராக சாமானியனாக திராவிட முன்னேற்றக் கழகம் என தனி ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்கி, ஆட்சியை பிடித்து மற்ற மாநிலங் களுக்கு வழிகாட்டியவர்.. நினைத்துப்பார்த்தால் இன்றளவும் மெய்சிலிர்த்து போகிற சாதனையாகும்..நாங்கள் சொல்லளவில்தான்.. ஆனால் அண்ணாதுரையோ அதை சாதித்தே காட்டியவர் என்று குருநாதர் பெரியாரே பாராட்டும் அளவிற்கு தன்னை வடிவமைத்துக் கொண்டவர்..

எவனும் எவனுக்கும் அடிமையில்லை என்ற சித்தாந்தத்தில் சாமானிய மக்களுக்கும் கல்வி அரசு வேலைவாய்ப்பு, ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டுமென்று சொல்லி சாதித்தும் காட்டியவர்..இன்று அவரைப் பார்த்து அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எள்ளி நகையோடு வோருக்கெல்லாம் அரசியல் பாதையை எப்படி போட வேண்டும் என்று இவரே பாடமாக அமைந்து போனார்..ஆண்டது ஒன்றரை ஆண்டு மட்டுமே.. ஆனால் அரை நூற்றாண்டை கடந்த பிறகும் அவரின் தாக்கமே ஆட்சிக் கட்டிலில் தொடர்கிறது..

மாநில சுயாட்சியின் மங்கா ஒளிவிளக்கு பேரறிஞர் அண்ணா…!

ஏழுமலை வெங்கடேசன்

error: Content is protected !!