குரு உச்சத்துல இருக்காரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா!
அறிமுக இயக்குநர் தண்டபாணி இயக்கத்தில், தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குரு உச்சத்துல இருக்காரு‘. குரு ஜீவா கதா நாயகனாகவும் பைசா திரைப்படத்தில் நடித்த ஆரா கதாநாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில்,பாண்டியராஜன், MS பாஸ்கர், நமோ நாராயணன், இமான் அண்ணாச்சி, மனோ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். குரு உச்சத்துல இருக்காரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் வசந்த், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, பின்னணிப் பாடகர் வேல் முருகன் மற்றும் பிக் பாஸ் புகழ் சினேகன் வருகை தந்திருந்தனர்.
இவர்கள் முன்னிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டது. வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இயக்குநரை, தயாரிப்பாளரை, படத்தில் பணிபுரிந்த கலைஞர்களை பாராட்டி படம் வெற்றி பெற வாழ்த்தினார்கள்.
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கேரளாவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெற்றது. அங்கே, மெயின் ரோட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள அருவியில் ஒரு முக்கிய காட்சியின் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். லொக்கேஷன் பார்க்கும் போது அருவியில் வந்த தண்ணீர், படப்பிடிப்பின் போது தண்ணீர் வராததால், 70 லாரிகளில் தண்ணீர் வர வைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
அந்த அருவியில் நீர் வருவதைக் கண்டு, அங்குள்ள யானை ஒன்று தாகத்தைத் தீர்க்க அப்பகுதிக்கு வந்துள்ளது. யானையை பார்த்த ‘குரு உச்சத்துல இருக்காரு’ படக்குழுவினர் மிரண்டிருக்கின்றனர். ஆனால், அந்த யானையோ படக்குழுவினரை தொந்தரவு செய்யாமல் நீரை குடித்து விட்டு சென்றது. அதன் பின் தக்க பாதுகாப்புடன் மீதிப் படப்பிடிப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குரு உச்சத்தில இருக்காரு திரைப்படத்திற்கு இசையமைத்த தாஜ் நூர்,இதில் வேலை பார்த்தது தனக்கு ஒரு புது அனுபவத்தை தந்ததாகவும், பாடல் காட்சிகள் படப்பிடிப்புகள் முடிந்த பின்னால் இசையமைத்தது சவாலாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். சினேகன், பா. விஜய் மற்றும் மீனாட்சி சுந்தரம் இந்த திரைப்படத்தின் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்கள்.