கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர மோடி அரசு ஒப்புதல்!
நாடெங்கும் உள்ள 1482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் 58 கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கியின் (RBI) கண்காணிப்பின் கீழ் கொண்டு வர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது.
இன்று புது டெல்லியல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.
அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்காக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை மத்திய செய்தி – ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்த தகவல்கள் இதோ:.
ஷெட்யூல்ட் வங்கிகளின் மீது ரிசர்வ் வங்கிக்கு உள்ள கண்காணிப்பு அதிகாரம், கூட்டுறவு வங்கிகளுக்கும் விரிவு படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
பிரதமர் முத்ரா யோஜனாவின் கீழ் ஷிஷு கடன் வகை கடன் வாங்குபவர்களுக்கு 2% வட்டி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் துணை வகைப்படுத்தலின் சிக்கலை 6 மாதங்களுக்குள் – அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை ஆய்வு செய்ய அரசியலமைப்பின் 340வது பிரிவின் கீழ் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்கவும் ஒப்புதல் அளித்தது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலைய அந்தஸ்திற்கு உயர்த்தவும் மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியதாகவும்,
இஸ்ரோவின் விண்வெளித் திட்ட வசதிகளையும், கட்டமைப்புகளையும் தனியார் துறையினர் பயன்படுத்துவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவையும் மத்திய அமைச்சரவை எடுத்துள்ளதாகவும் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்தார்.
கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி அமைக்கப்படும் என்றும், தகுதியான பயனாளிகளுக்கு 3% வட்டி வழங்கலை அரசாங்கம் வழங்கும் என்றும் மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார்.