இன்றைய கூகுள் டூடுளில் இடம் பிடித்துள்ளவர் கமலா தாஸ்..!

இன்றைய கூகுள் டூடுளில் இடம் பிடித்துள்ளவர் கமலா தாஸ்..!

கமலா தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி தெரியுமில்லையா?… மூன்று மொழிகளில் பேசுகிற-இரண்டு மொழிகளில் எழுதுகிற ஆனால் ஒரே மொழியில் கனாக் காண்கிற ” அந்த இந்திய எழுத்தாளர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை சர்வதேச புகழ் புகழ் பெற்றவை.

..

1934ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி, கேரளத்தின் திருச்சூர் அருகிலுள்ள நாலாப்பட்டு தறவாட்டில், மாத்ருபூமி நாளேட்டின் நிர்வாக ஆசிரியரான வி.எம்.நாயர் என்பவருக்கும், கவிஞர் பாலாமணியம்மாவிற்கும் மகளாகப் பிறந்தவர் ஆமி என்று சிறுவயதில் அழைக்கப்பட்ட மாதவிக்குட்டி. மலையாளத்தில் மாதவிக்குட்டியாகவும் ஆங்கிலத்தில் கமலாதாஸ் ஆகவும் அறியப்பட்ட இவருடைய ‘என் கதை’என்ற தன்வரலாற்று நூல் இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனையானதாகக் கூறப்படுகிறது. அந்நூல் பலவிதமான சர்ச்சைகளுக்கு உள்ளானது. அதில் தன்னுடைய பாலியல் பரிசோதனைகளை கிளர்ச்சியூட்டும்படி எழுதியிருந்தார். இளவயது ‘தோழனின்’ விந்துவின் வாசனையைப்பற்றிய வருணனைகள் அவரை புகழ்பெறச்செய்தன. இந்த நூல் மலையாளத்தில் “என்டே கதா” என்ற பெயரில் வெளியிட்ட வருடம் 1973. அப்போது, கமலாதாஸூக்கு வயது 39. இரண்டு குழந்தைக்கு தாய். கணவனோடு வாழ்ந்து வருபவர். இப்படிப்பட்ட குடும்பப் பின்னனியில் இருப்பவர், தனது பதின்ம வயதில் அனுபவம் தொடங்கி, திருமணம் உறவு, அந்தரங்க காதல், காமம் என்று அனைத்தும் துணிவோடு பகிர்ந்து இருந்தார்.

ஆனால் கற்பு, கலாச்சாரம் இன்னபிறவற்றினால் இயக்கப்படும் நமது ஆச்சாரப்பசுக்கள் அந்நூல் மிகையான பாலியலைப் பேசியதாகக் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் ‘இது’குமுதத்திலும் தொடராக வந்தது.

“‘என் கதை’யைப் படித்து பலரும் அதிர்ந்துபோனதாகச் சொல்லப்படுகிறதே…” என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது, “அதிர்ந்துபோனதுபோல பாசாங்கு செய்தனர்”என்று பதிலளித்தார் கமலாதாஸ். ஆன்மாவின் அடியாழத்திலிருந்து புறப்பட்டு வந்த பதிலாக அது அமைந்திருந்தது. ‘நாம் புனிதமானவர்கள், கண்ணுக்குத் தெரியாத வரையறைகளுக்குக் கட்டுப்பட விதிக்கப்பட்டவர்கள்’ போன்ற பொய்மைகளைத் துகிலுரிந்து காட்டியது அந்தத் துணிச்சலான பதில்.

அவர் சொல்கிறார்:

“என் வாழ்வின் இரகசியங்கள் எல்லாவற்றையும் எழுதி என்னைக் காலி உடம்பாக ஆக்கிவிடவேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்” என்று.

தனது 67-வது வயதில் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய கமலா தாஸ் 2009 மே 31-இல் கமலா சுரையாவாக இறந்தார். சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற இவர் குழப்பவாதியாகவும், உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுபவராகவும், கனவு காண்பவராகவும், தத்தளிக்கும் மனோநிலையுடையவராகவும் சித்தரிக்கப்பட்டார்.

error: Content is protected !!