தங்கம் சேமிப்பில் முதலிடம் பெற்ற கேரளா!
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான சில நிமிஷங்களில் மக்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த நோட்டுகளை தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதன் காரணமாக, அன்றைய தினம் நள்ளிரவு 12 மணி வரை நகைக்கடைகளில் விற்பனை நடைபெற்றது. ஒரே நாள் இரவில் 600 சதவீதம் உற்பத்தி அதிகரித்தது.
ஆனால் புதிய ரூபாய் நோட்டுகளை அரசு வெளியிடத் தொடங்கியதைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் காரணமாக, தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. தொடர்ந்து சில நாளாக தங்கத்தின் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை குறைந்தாலும் மக்களின் கைகளில் பணப்புழக்கம் குறைந்துள்ளதால், தங்க நகை விற்பனை மொத்தமாகக் குறைந்துள்ளது. தங்கநகை உள்ளிட்ட வேறு எந்தவித முதலீட்டிலும் ஈடுபடாமல் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கும், புதிய நோட்டுகளைப் பெறுவதற்கும் மக்கள் வங்கிகளிலேயே கதியாகக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விற்பனையில் ரூ.500 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) நடத்திய ஆய்வில், ‘கிராமப்புரத்தில் அதிகளவில் தங்கத்தை சேமித்து வைக்கும் பழக்கம் கொண்ட மாநிலங்களில் கேரள முதலிடம் பிடித்துள்ளது. இங்கு சராசரியாக ஒரு வீட்டில் ரூ.1,61,211 மதிப்பிலான தங்கம் வைத்துள்ளனர். இரண்டாம் இடத்தில் தமிழக கிராமப்புற மக்கள் உள்ளனர். தமிழக கிராமவாசிகள் சராசரியாக ரூ.1,08,094 மதிப்பிலான தங்கத்தை வைத்துள்ளனர். 3வது இடத்தை கோவாவும் (ரூ.1,06,327), 4வது இடத்தை இமாச்சலபிரதேசமும் (ரூ.71,089), 5வது இடத்தை குஜராத்தும் (ரூ.70,500) பெற்றுள்ளன.
இதேபோல், நகர்ப்புறங்களில் அதிகளவில் தங்கத்தை சேமித்து வைக்கும் பழக்கம் கொண்ட மாநிலங்களிலும் கேரளா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு சராசரியாக ரூ.2,58,608 மதிப்பிலான தங்கத்தை மக்கள் சேமித்து வைத்துள்ளனர். 2ம் இடத்தில் கோவாவும் (ரூ.2,00,346), 3வது இடத்தை தமிழகமும் (ரூ.1,86,738), 4வது இடத்தை தெலங்கானாவும் (ரூ.1,28,800), 5வது இடத்தை இமாச்சலப்பிரதேசமும் (ரூ.1,09,801) பிடித்துள்ளன’.என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் மொத்தம் உள்ள தங்கத்தின் 47 சதவிதம் கேரளாவின் மூன்று கடன் கொடுக்கும் நிறுவனங்களில் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளாது. .